பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. தாவிக் குதிக்கும் மனக்குரங்கு


சீகோ’ மணி பன்னிரண்டு!

ரேவதியின் கண்கள் திறக்கின்றன.

மேனியின் சிலிர்ப்பு இன்னமும் அடங்கவில்லை போலும்!

அன்றைக்குக் கோவிலில் ஞானசீலனின் அன்பைப் பொருட்படுத்தாமல் அவனிடமிருந்து பிரிந்து, அந்தி மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்த போது ஏற்பட்ட அதே மேனிச் சிலிர்ப்பை பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதும் அனுபவிக்க நேர்ந்ததை உணர்ந்ததும், கால் பாவி நின்ற நிலம் பிளந்து விட்ட மாதிரி அவள் பதைத்து விட்டாள். நாற்புறமும் கலங்கிய விழிகளை மாறி மாறியும் மாற்றி மாற்றியும் சுழல விட்டாள். எல்லாக் கதவுகளும் தாழிடப்பட்டிருக்கின்றன.

அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்: “நான் யார்?... ஞானசீலன் யார்? - நான் டாக்டர் ரேவதி. ஆமாம்; நான் நான்தான்; நான் நானேதான்! என்னைப் பொறுத்த வரை எதுவும் யாரும் எனக்கு அப்புறம்தான்! அவர்... மிஸ்டர் மனச்சாட்சியாம்... அதுவும் என் மனச்சாட்சியாம்! சுத்தப் பேத்தல்!...” விதியை வம்புக்கு இழுக்கிற தோரணையில் அவள் பலமாகச் சிரித்தாள்.