பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

மனம் என்றால் நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும்; மனத்தின் யதார்த்தமான நிலை இது. இப்போது அவள் மனம் அந்த பழஞ்சோற்றை பதச் சோறாகப் படம் பிடித்து எடுத்துக் காட்டும் போது, அவள் மறுத்துத்தான் தீர வேண்டுமென்று எந்தப் புரட்சியும் இலக்கணம் வகுத்துக் காண்பிக்கவில்லைதான்!

ஊம்...

மற்றுமொரு மஞ்சள் வெயில் மாலை வேளையில், மன்னர் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய கலை விழாவில் கலந்து கொண்டு விட்டு கால்நடையாக திரும்பிக் கொண்டிருந்தாள், ரேவதி. சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த குலோத்துங்கனும், யசோதாவும் காதலாகிக் கலியாணம் செய்து கொண்ட சுபமான பழைய நிகழ்ச்சியை நினைவூட்டுகிற மாதிரி, அவர்கள் இருவரையும் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்துப் பேசிய பின் அவள் நடையைத் தொடர்ந்த நேரத்தில், வானம் பொத்துக் கொண்டது. ஒதுங்க இடம் தேடிக் கொண்டு இருந்த அவளை உரசிக் கொண்டு ‘செவர்லே’ ரோஜா பூத்த மாதிரி வந்து நின்றதைக் கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்தாள். “ஓ.. நீங்களா!”

ஞானசீலன் புன்னகை பூத்தவாறு “நான் எப்பொழுதும் உங்கள் பணியாள்தான். ஏறிக் கொள்ளுங்கள்” என்று கூறி கதவைத் திறந்து விட்டான். அவளும் வேறு வழியில்லாமல் ஏறிக் கொண்டாள்.

அவனது மாளிகைக்குள் போய் கார் நின்றது. “மன்னித்துக் கொள்ளுங்கள் டாக்டர். ஒரு சிறு வேலை; முடித்து விட்டு வந்து விடுகிறேன். ஆட்சேபணை இல்லை என்றால் நீங்கள் கூட உள்ளே வந்து அமரலாம்.”

அவளுக்கு ஆட்சேபணை என்ன? அச்சம் என்ன? அவனும் திரும்பி வர எவ்வளவு நேரம் ஆகுமோ? மழையும் நின்றபாடாக இல்லை. ரேவதியும் இறங்கினாள்.

அ. மோ-3