பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 23 குற்றாலத்துக் குருநாதரிடம் வந்து, ரசவாதம் பற்றிப் பேசும் சாமியார்கள் என்பவர்களையும், சம்சாரிகள் என்பவர்களையும் உற்றுக் கவனித்தார். ஒருநாள், குருநாதரிடம் வட்ட வட்டமாய் வன்னியர் மகளாய் இருக்கிற மூலிகை எது? என்று கேட்டார். சம்பூர்ணத்தை, ஏற இறங்கப் பார்த்த அந்த எண்பது வயது ஆசிரமக்காரர், இது வைத்தியத்துக்குச் சம்பந்தப்படாத மூலிகை. உனக்குத் தெரிய வேண்டிய தேவையில்லாத ஒரு மூலிகை என்று கடுகடுத்தார். பேச்சுக்கு ஒரு இடைவெளி கொடுத்து இனி இதைப் பற்றிக் கேளாதே' என்று ஆணையிட்டார். இதுவே சம்பூர்ணத்துக்கு ஒரு போர் உணர்வை ஏற்படுத்தியது. தானே, அந்த மூலிகையைக் கண்டுபிடித்து, ரசவாத பரீட்சையில் தேறி, குருநாதருக்கே மார்க் போட வேண்டும் என்ற எண்ணம். இத்தகைய மனோபாவத்தில் ஊருக்கு வந்த சம்பூர்ணம், ரஸவாத வித்தையைக் கண்டுபிடித்ததைக் காட்சியாக்க நினைத்த சமயத்தில்தான், மயில்சாமி வந்தார். வர வேண்டியவர்தான். இருவரும் சேர்ந்து, கண்டுபிடிக்கப்பட்ட மூலி கையையும், இதர மருந்துப் பொருட்களையும் அந்த வீட்டிலேயே இருந்த கமண்டலம் போன்ற பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்தார்கள். கீழே கமலாக்கினி.' பாத்திரத்தின் மேல் முனையில், யானையின் தும்பிக்கை போலிருந்த குழாயின் வழியாக வந்த நீராவியை ஒரு சீசாவில் பிடித்துக் குளிர்ந்த நீரில் சீசாவை வைத்தார்கள். நீராவி நீராகியது; பிறகு மயில் துத்தத்தை அந்த நீரில் போட்டுக் கல்வத்தில் அரைத்து வெயிலில் காய வைத்தார்கள். பின்னர், அதை அகல் விளக்குகளில் போட்டு, துணியால் மூடி இறுகக் கட்டினார்கள். அப்புறம் அதைப் புடம் போட்டார்கள். அகல் விளக்குகளை விலக்கியபோது மயில்சாமி துள்ளிக் குதித்தார்.