பக்கம்:ஆடரங்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ஆடரங்கு


ராஜாமணி பதில் சொல்லாமல் மனம் நிறைந்தவனாகச் சென்றான். கிணற்றிலிருந்து நாலு குடம் ஜலம் இழுத்துவிட்டுக்கொண்டபின்தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. சற்று முன் அவன் மனசில் ஓர் எண்ணம் தோன்றியது: 'அவர் போனபிறகுதான் எனக்கு நல்ல காலம் தொடங்கும்' என்ற அந்தச் சிந்தனையின் எதிரொலி அவர் மனசிலும் எழுந்திருந்தால்......? கிணற்றில் விட்ட குடத்தை அப்படியே விட்டு விட்டுத் துண்டால் தலையைப் பரபரப்பாகத் துடைத்துக் கொண்டு உடம்பிலிருந்து ஈரம் சொட்டச் சொட்டக் கூடத்துக்கு வந்தான்.

நடுக் கூடத்தில் தெற்கு வடக்காகத் துணியை விரித்துக் கொண்டு படுத்திருந்தார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள். அவர் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்திருந்தது.

"அப்பா" என்றான் ராஜாமணி. பதில் சொல்லுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவர் பதில் சொல்லவில்லை.

பிரேதத்தைத் தொட்டுப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை ராஜாமணிக்கு. ஈரத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு,கூடத்துத் தூணில் சாய்ந்தான் ராஜாமணி. அவன் ஈர முதுகிலிருந்து ஜலம் தரையில் ஓடியது.

"முதலில் தாய் இருந்தாள்-கடைசியில் பிள்ளை இருந்தான். அவர்களுக்கென்று தியாகம் செய்வது அவருக்குச் சாத்தியமாக இருந்தது. எனக்கு யார் இருக்கிறார்கள்? யாருக்கென்று நான் என்ன தியாகம் செய்வதற்காக உயிர்வாழ வேண்டும்?" என்று தன்னையே கேட்டுக்கொண்டான் ராஜாமணி.

இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை.

"வயசு முப்பத்தைந்துதான் ஆகிறது. நானும் அவர் வயசு வரை இருக்கும்படி நேர்ந்துவிட்டால்......?"

இந்தக் கேள்விக்கும் பதில் ஏது ?

அவன் மீண்டும் சுய நினைவு பெற்றபோது, இருட்டத் தொடங்கிவிட்டது.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/107&oldid=1523732" இலிருந்து மீள்விக்கப்பட்டது