144
ஆடரங்கு
"நான் அப்பா கிட்டத்தான் உட்காந்துப்பேன்" என்று என் மடியில் தாவி உட்கார்ந்துகொண்டாள் பாப்பா.
நவரத்தின ஆசாமி கேட்டார்: "தஞ்சாவூரில்......"
"எங்கப்பாவுக்கு மாத்தலாயிருக்கு. பார்த்துவிட்டு வரப்போறேன்" என்றாள் லீலா.
"உங்கப்பா என்ன வேலையிலிருக்கிறார்?" என்று விடாமல் கேட்டார் நவரத்தின ஆசாமி.
"மெடிகல் சர்விஸிலிருக்கிறார்" என்றாள் லீலா.
இந்த மனிதனின் பேச்சைச் சற்று என் பக்கம் திருப்பினால் அந்தப் பெண்ணுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணி நான் சொன்னேன். "உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிற மாதிரியிருக்கு! ஆனால் எங்கேன்னுதான் தெரியவில்லை" என்றேன்.
"நீங்க தெரிஞ்சுக்கல்லே என்கிறது எனக்கும் தெரிகிறது" என்றார் அவர்.
அவரைத் தெரிந்துகொள்ளாதது என் பிசகு என்று அவர் சுட்டிக் காட்டியமாதிரி தோன்றியது. என்னைத் தெரிந்து கொண்டவர் மாதிரியும் பேசினார் அவர். நான் இதைப்பற்றி யோசித்துக்கொண் டிருக்கும்போது ரெயில் சீர்காழியில் நின்றது.
சீர்காழி பிளாட்பாரத்தில் ஏதோ அல்லோலகல்லோலமாக இருந்தது. ஒருவருடைய சட்டைப் பையிலிருந்து பர்ஸைக் களவாடிய திருடனைச் சிலர் பிடித்துப் போலீஸாரிடம் ஒப்பித்துவிட்டார்கள் என்று யாரையுமே விசாரிக்காமல் அறிந்து கொண்டோம்.
சீர்காழியைவிட்டு ரெயில் கிளம்பியதும் நான் அவரிடம் சொன்னேன்: "எனக்கு எப்பவுமே மறதி அதிகந்தான். உங்க பேரைச்சொன்னால்....."