இலக்கியாசிரியனின் மனைவி
1
“இதோ பார், காமு, தபாலில் என்ன வந்திருக்கிறது பார்”.
“என்னத்தை வரும்? வழக்கமாக வரதெல்லாந்தான் வந்திருக்கும், வேறு என்ன ? உங்கள் கதை ரொம்ப அற்புதமாக இருக்கிறது என்று தமிழ் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் ஒரே மனசாக அபிப்பிராயப்படுகிறார்கள் என்றும், அந்த அற்புதக் கதைக்குச் சம்மானமாக நாலு ரூபாயில் மணியார்டர் கமிஷன் கழித்து மூணே முக்காலே அரைக்கால் ருபாய்க்கு மணியார்டரும் வந்திருக்கும். வேறே என்ன வரப்போகிறது? என்றாள் காமு.
“ஒரு மணியார்டர் இல்லை; இரண்டு மணியார்டர் வந்திருக்கு இன்று.”
“நம் தரித்திரம் விடிந்து விடும் !”
“ஒரு குட்டி நாவல் உடனே தேவையாம். நூறு ரூபாய் தருகிறாராம் ராமசாமி.”
“உடனே தேவை என்பதற்கு உங்கள் வியாக்கியானம் ஆறு மாசத்தில் என்று. நூறு ரூபாய் என்பதற்கு உங்கள் ராமசாமியின் வியாக்கியானம் மாசம் ஒரு ரூபாயாக நூறு மாசத்தில் என்று. இதெல்லாம் என்னிடம் சொல்வதோடு இருக்கட்டும். வேறு யாராவது நாலு பேர் கேட்டால் சிரிப்பார்கள்!”
“நீ இலக்கியாசிரியனுடைய மனைவியாக இருக்க லாயக் கற்றவள். யாராவது குமாஸ்தாவைப் பார்த்துக் கல்யாணம் செய்துகொண் டிருக்கவேணும், நீ” என்றான் சுவாமிராநாதன்.