கிரகப் பிரவேசம்
45
வீட்டில் தம் பிள்ளையுடன்தான் ஆகட்டும் அவர் என்றுமே யாருடனும் நெருங்கிப் பழகியதில்லை. இதற்கு மற்றவர்கள் மேல் பிசகு சொல்ல முடியாது. உதாரணமாக, பிள்ளையை எடுத்துக்கொள்வோம். அவன் என்ன பாவம் செய்தான் ? ஒன்றுமில்லை. அதாவது ராவ்பகதூர் நரசிம்ம ஐயரின் பிள்ளையாக வந்து அவதரித்துவிட்ட ஒரு பாவத்தைத் தவிர, அவன் வேறு ஒரு பாவமும் அறியான். சர்க்கார்க் காரியாலயத்திலே, அவர் இலாக்கா நாணயத்துக்கும் யோக்கியதைக்கும் பேர் போனது. ஆனால், அதிலுள்ள குமாஸ்தாக்களையோ, உத்தியோகஸ்தர்களையோ, அவர் என்றுமே தம்மை அணுகவும் விட்டது கிடையாது. ஏன்? ஏனோ, யார் சொல்ல முடியும்?
மறுநாள் - அதாவது இன்று - பொழுது விடிந்தால், புது வீட்டுக்குக் கிரகப்பிரவேசம். எதற்காக, யாருக்காக, அவர் புது வீடு கட்டிக் குடி போகிறார்? யாருக்காகவும் இல்லை. ராவ்பகதூர் நரசிம்ம ஐயர் - தாம் - புது வீட்டில், சொந்த வீட்டில் குடி புக இருந்தார் - அவ்வளவுதான் ராவ்பகதூரின் உள்ளத்திலே உறைத்தது. இந்தக் காரியத்துக்கு வேறு காரணம் தேவையாய் இருப்பதாகவும் அவருக்குத் தோன்றவில்லை.
ஐம்பத்துநாலு வருஷங்கள் தாம் வாழ்ந்தது யாருக்காக, எதற்காக? ஈஸிச்சேருக்கு அண்டையில் யாரோ வந்து நின்று லேசாக நகைப்பது போன்ற உணர்ச்சி, ராவ்பகதூர் நரசிம்ம ஐயருக்கு ஏற்பட்டது. சட்டென்று பதறித் திரும்பிப் பார்த்தார். காளி சொரூபமாகத் தம் மனைவி தலை விரித்துப் பல்லை இளித்துக் கொண்டு அண்டையில் வந்து நிற்பதுபோல, ஒரு விநாடி அவர் கண்ணில் பட்டது. அடுத்த விநாடி பிரமை நீங்கிவிட்டது. அண்டையில் யாரும் இல்லை. ' என்ன பைத்தியக்காரச் சிந்தனைகள் இன்று ' என்று ? எண்ணியவராக, ஈஸிச்சேரில் அசைந்து நிமிர்ந்து உட்கார்ந்தார் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர்.
வானம் வெளிரிட்டுக் கொண்டிருந்தது. அதிகாலையில் எழுந்து சிலர் அவசரமான தங்கள் அலுவல்களைப் பார்க்கத்