பக்கம்:ஆடரங்கு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மகாத் தியாகம்

“தான் ஆடாவிட்டாலும் சதை ஆடத்தானேடா செய்கிறது......... என்ன செய்ய?” என்றார் கிழவர்.

“இதோ பார் அப்பா! இந்த வயசில் நீ இன்னமும் என்னால் கஷ்டப்பட்டுக்கொண் டிருப்பது சரியல்ல; நியாயமல்ல. நீ உன் பாட்டைப் பார்த்துக்கொள். ஏதோ சர்க்கார் தயவு பண்ணித் தருகிற பென்ஷன் வருகிறது, உனக்குப் போதும்...” என்றான் ராஜாமணி.

“பிரமாதப் பென்ஷன்தான்... இருபத்தெட்டு ரூபாய்” என்றார் கிழவர்.

“பிரமாதமோ பிரமாதமில்லையோ, அது போதும் உனக்கு. தவிரவும் அந்தப் பென்ஷன் குறைந்ததும் என்னாலேதானே. இருபது ரூபாயைக் கம்யூட் பண்ணிப் பணமாகக் கொடுத்தே. கடைசியாக, அதையும் தீர்த்துவிட்டேன். நான் தொட்டதெல்லாம் ஏனோ துலங்கவே மாட்டேன் என்கிறது...” என்றான் ராஜாமணி.

“போக வேண்டியதெல்லாம் போகட்டும்” என்றார் கிழவர். அவர் மனசிலிருந்த ஆத்திரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அவருடைய குரலில் தொனிக்கவில்லை.

“நீ என்னை விட்டுப் பிரிந்து தனியாக இருப்பதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த வயசில் என் கஷ்ட நஷ்டங்களில் உன்னையும் பங்கெடுத்துக்கொள்ளச் சொல்வது சரியல்ல. காலம் வராதா? நல்ல காலம் வந்ததும் மறுபடியும் சேர்ந்துகொள்வது!” என்றான் ராஜாமணி.

“சின்னப் பையனுக்குச் சொல்ற மாதிரி ஏதேதோ சொல்றயே! வயசு அறுபத்துநாலு ஆயிடுத்து, போன சித்திரைக்கு. இந்த மார்கழி மாசம்வரை தாங்கினால் பெரிசு...”

“சாகறத்துக்கு ஆசைப்படற மாதிரி பேசறயே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/97&oldid=1523495" இலிருந்து மீள்விக்கப்பட்டது