தீபம்
99
பேசி முடியுமுன், முஷ்டியைக் காட்டிக் கொண்டு பாய்ந்து வந்தான் கண்ணப்பன்.
“செந்தாமரையைப் பத்தி மேலே ஒரு பேச்சுப் பேசினே, உடம்பிலே உள்ள எலும்பை எல்லாம் எண்ணிக் கொடுப்பேன் கையிலே!” என்று கர்ஜனை செய்தான்.
“அத்தான் நீங்க சும்மா இருங்க!” என்று அவனைக் கையமர்த்திய செந்தாமரை, “தன்னைப் போலத் தானே மத்தவங்களையும் எண்ணுவான் சாத்தையா. ஊரை விட்டு ஓடி, சிங்கப்பூரிலே போய் வாழ்ந்த இந்த சாத்தையாவைப் பத்தி, மாங்குடியிலே போய் கேட்டுப் பார்த்தா யோக்கியதை தெரியும். இந்தச் செந்தாமரையோ, அல்லியோ இவனுக்குப் பயப்பட மாட்டாங்க!” என்று மீண்டும் சீறிய செந்தாமரை, உணர்ச்சி வசத்தால் தடுமாறினாள்.
அருணாசலம் சாத்தையாவைப் பார்த்த போது, அவன் தலை குனிந்திருந்தது. தன் அக்கிரமச் செயல்கள் முழுவதும் அம்பலமாகிப் போய் விடுமோ; அருணாசலம் தன் பேச்சை நம்பாது போய் விடுவானோ என்று திக்குமுக்காடினான்; ‘இந்தச் செந்தாமரை எங்கிருந்து இப்பொழுது வந்து முளைத்தாள்?’ என்று கலங்கிப் போய்த் தலை குனிந்து நின்றிருந்தான் சாத்தையா.
“தெய்வமே! என் மகள் அல்லிக்கு வாழ்வு கொடுத்து எங்களைக் காப்பாற்று!” என்ற ராஜநாயகத்தின் பிரார்த்தனை, உலகமெங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்டவன் பால் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது…
“யார் சொல்வதை நம்புவது? யார் சொல்வதை நம்பாமல் விடுவது? உண்மை எது? உண்மைக் கலப்பற்ற பொய் எது? தெய்வமே! நீதான் எனக்கு நல்ல வழியைக் காட்ட வேணும்!”
அருணாசலத்தின் இதய தீபம் சூறாவளிக்கு நடுவே அகப்பட்டு ஆடிக் கொண்டேயிருந்தது.