128
ஆடும்
‘யாரப்பா நீ?’—தெரு வாசலில் காரை நிறுத்தி விட்டு, “அல்லியம்மா இருக்காங்களா?” என்று கேட்டுக் கொண்டே, படியேறிய மனிதனை நோக்கிக் கேட்டாள் அல்லி.
‘பலராம் பிக்சர்ஸிலிருந்து வர்றேன். நீங்கதான் அல்லி அம்மாவா? கூட்டிக் கொண்டு வரச் சொன்னாங்க.’
“யார் பலராமையாவா?”
“இல்லே உங்க ஐயா—ராஜநாயக ஐயா…”
அல்லி உள்ளே சென்றாள்; ராஜகுமாரி போல் திரும்பி வந்தாள். அவளைச் சுமந்து கொண்டு, கார் பறந்தது.
“அருணாசலம், நீங்கதான் என்னோட உசிரு. ஆனா, அது நீங்க களங்கமில்லாதவரா இருந்தாத்தான். நீங்க மாசு உள்ளவரா இருந்தா, என் உசிரு செத்தது. அப்புறம் நான் நடமாடும் பிணந்தான். அந்த உண்மை தெரியற வரைக்கும் இந்த ஈடுபாடு. உண்மை எப்படி இருக்கும்?…”
காரில் போகிற போது மட்டும் அல்ல; எப்போதும் அவளுக்கு இதுவேதான் சிந்தனை. தன் உள்ளத்தை, மரத்த நிலைக்கு உட்படுத்தும் நோக்கமும் இந்தப் புதிய ஈடுபாட்டிலே நிறைவேறும் என்பது அவள் எண்ணம். ஆனால், ராஜநாயகத்தினிடம் எதுவுமே சொல்லாமல் மறைத்து வைத்தது, அவர் மன நிலையை அவள் அறிந்திருந்ததால் மட்டும் அல்ல; அதனால், பெரிய விபரீதங்கள் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தினாலுந்தான்! சுகுணா என்ற பெண்ணை நேரில் பார்த்து, அவள் அனுமதி பெற்றுப் பிறகு, அருணாசலத்தை மணக்க வேண்டும் என அவள் எண்ணினாள்.
கார் ஓடிக் கொண்டே இருந்தது.