உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீபம்

161


அருணாசலம் திறந்த கதவுகளை, ஓரக் கண்ணால் பார்த்தவாறு இருந்தான்.

“என்ன அருணாசலம், ஓடப் பார்க்கிறாயா? காரியம் மிஞ்சி விட்டது!”

“நீ என்ன சொல்கிறாய், இன்னாசி”

அல்லி பதை பதைத்தாள்.

அருணாசலம் இவர்களுடைய நண்பன் என்று தெரியும். ஆனால் பழங்கணக்கு ஒன்றை, இன்னாசி வீசுகிறானே? இல்லை, அதுவும் ‘சுகுணா’ போன்ற கதைதானா? அப்படியானால், அருணாசலம் ஏன் இப்படி வாயடைத்து, ஓடத் தயாராக இருக்கிறவனைப் போல, நிற்க வேண்டும்?

அவளுடைய எண்ணச் சங்கிலி திடீரென அறுந்தது.

அவள் கண் முன் நின்ற அருணாசலம், மின்னலாகப் பாய்ந்து வெளியே ஓட, பின்னால் இன்னாசி விரைந்து தொடர்ந்தான்.

ராஜநாயகமும் ஓடினார்…!

அவர்கள் எந்த ‘டாக்ஸி’யில் வந்து இறங்கினார்களோ, அதில் அருணாசலமும் ஏறியது, அவர் கண்ணுக்குத் தெரிந்தது. காரியம் எல்லோர் கையையும் விட்டு அகன்றதாகவே, எண்ணினார்.

அவர் மீண்டும் அறைக்குள் நுழைந்த போது, அல்லி அழுது கொண்டிருந்தாள். உண்மை புரிந்த போது, உணர்ச்சிக் கட்டு, தானே அவிழ்ந்து கொண்டது. மனக் கோயிலில், அவளே ஆவாகனம் பண்ணி வைத்த உருவம், கண் முன் இப்படியா சரிய வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/162&oldid=1688785" இலிருந்து மீள்விக்கப்பட்டது