34
ஆடும்
“அவள் கையை விடுடா, கழுதை”
“சீ நாயே! இந்தா, இதை வாங்கிக் கொள்”
மிருகங்களாக மாறிக் கொண்டிருந்தவர்கள் பேச்சு நிலை கடந்து, செயல் நிலையை அடைந்தார்கள். சாத்தையா எட்டி உதைத்தான். இன்னாசி காறித் துப்பினான்.
அல்லி திண்டாடித் தவித்தாள்.
“ஓ. இவ்வளவுக்கு ஆயிட்டுதா?” என்று சாத்தையா சொல்லை எறிந்தான் முதலில். முஷ்டியை வீசினான் தொடர்ந்து.
இன்னாசியின் முகம் பூரி மாவு அல்ல. குத்துகிற குத்தையெல்லாம் இயல்பாக ஏற்றுக் கொள்ள. அவன் மூக்கு நசுங்கியது. வேதனை தந்தது. இடது கண் ‘கிண்’ணென்று வலித்தது. வெளிப்படையாகப்பட்ட அந்தக் குத்து, அவன் உள்ளத்திலும் பலமாகப் பட்டு, ஆங்காரத்தை எழுப்பியது.
“சிங்கப்பூர் காசு உனக்குத் திமிர் ஏற்றி விட்டதோ? ஓகோ, என்னிடம் வாலாட்டாதே தம்பி, ஒட்ட நறுக்கி விடுவேன்!” என்று சொல்லி, பதில் குத்து விட்டான் இன்னாசி.
அழகியை முன் நிறுத்தி, அசுரர்கள்தான் போராடுவர் என்பதில்லை. மனிதர்களும் அசுரர்களாக முடியும் என்று, அவர்கள் நிரூபிக்கலானார்கள்.
இன்னனாசியையும், சாத்தையாவையும் சுந்த, உப சுந்தராக்கி விட்டு, திலோத்தமை மாதிரி வேடிக்கை பார்த்து மகிழும் மனம் அல்லிக்கு இல்லை. அவள் தப்பி ஓடுவதற்கு வாய்ப்புக் கிட்டாதா என்று காத்து நின்றாள்.
தன்மானமும், தணியாத வெறியும் அவ்விரு வாலிபர்களைத் தனித்தவர்களாக்கின. அவளை அவர்கள் பிடியிலிருந்து விலக்கி ஒதுக்கின.