66
ஆடும்
துளிகள் தேங்கி நின்றன. உதடுகள் சொல்லொண்ணத் துயரத்தால், மெல்ல அசைந்தன.
அவன் அவளைக் கவனித்தான் ,
“அல்லி,ஏன் கலங்குகிறாய்? ஓரளவு வீட்டுக்கு அடங்காத பிள்ளை நான். சேற்றிலும், சகதியிலும் பாடுபடும் தந்தைக்கு உதவியாக இராமல், ஊரை விட்டு ஊர் ஓடி வருகிறவன்தான். வளர்ந்து பலன் தர வேண்டிய விவசாயக் குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று. என் பெற்றோர் என்னை நம்பித்தான் இருக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு பலஹீனம், நிலையாமை, பட்டினத்து நாகரீகத்திலே ஏற்பட்டிருக்கிற பிரமை எல்லாமாகச் சேர்ந்து, என்னை இப்படி இயங்க வைக்கின்றன. என் குற்றங்கள் எனக்குப் புரிகின்றன. அவைகளை வெல்லத்தான், எனக்குத் துணிச்சல் இல்லை. திறமை இல்லை.”
அல்லி கண் மை கரைய அழுது விட்டாள். சற்று முன் ரோஜா மலரெனச் சிவந்திருந்த அவள் முகம், அதன் மையத்தைப் போலச் சிறிது வெளுத்து விட்டது.
அருணாசலத்திடம் ஒரு குணம் உண்டு. எதையுமே நினைத்துச் செய்து முடிக்கும் ஆற்றலும், செய்ய முடியா விட்டால், மறந்து போகும் குணமும் அவனுக்கு உண்டு.
அருணாசலம், தன் ஊரைப் பற்றியும், பெற்றோரைப் பற்றியும் மறந்து விட்டு, தனக்கே உரித்தான குறுநகையுடன் சோகமே உருவாக உட்கார்ந்திருக்கும் அல்லியைப் பார்த்தான். அவன் பார்வையின் தன்மையைத் தாள முடியாமல், “ஹுக்கும், போங்கள்! எது எப்படி வேணுமானலும் இருக்கட்டும். நீங்கள் சொல்கிற கெட்ட குணங்கள் எல்லாவற்றையும் தூக்கி மூலையில் எறிந்து விட்டு, நேர்மையாக நடக்க வேண்டும். ஒருவரையும் ஏமாற்றக் கூடாது. என்ன, தெரிந்ததா?” என்று அவன் முகத்துக்கு நேராக, மருதோன்றி இட்டிருந்த தன் கையை ஆட்டிப் பேசினாள்.