76
ஆடும்
வான் நின்று வீழ்ந்த உயிர்ச் சுடர் போலத் துடி துடித்தாள் அல்லி. கட்டிலில் வீழ்ந்த அவள், பெருகிய கண்ணீரைத் தாங்கி, அவள் துயரில் பங்கு கொண்டது அந்த வெண் உறை பொதிந்த தலையணை.
சிஷ்யைகள் விடை பெற்றுப் போனபின், ராஜநாயகம் அருணாசலத்தை நோக்கினார்.
“என்னப்பா அருணாசலம், ‘அக்கா மகளுடன்’ எங்கெல்லாம் சுற்றி விட்டு வருகிறாய்? உட்கார்ந்தே பதில் சொல்; பரவாயில்லை,” என்று தன் எதிரில் இருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக் காட்டினார் ராஜநாயகம்.
மௌனச் சாமி போல், அதில் உட்கார்ந்த அருணாசலம் இரண்டொரு வினாடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். அந்த அவகாசம், அவனது பழைய கில்லாடித் தனத்தை மீட்டு விட்டது. தன்மானத்தை அடக்கி, அதன் மேல் இறுமாப்பைப் போர்த்திக் கொண்டான் அவன் . கண்களிலே பணிவற்ற போக்கிரித் தனம் கூத்தாடியது. பேர் பெற்ற வில்லன் போல் ராஜநாயகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“முதலாளி வீட்டுக்குக் கூட்டிப் போனேன்!”
‘நீ யார் அதைக் கேட்பதற்கு?’ என்ற வினா அதில் ஒலித்தது.
“முதலாளி வீட்டுக்கா? எந்த முதலாளி வீட்டுக்கு?”
“அழகி படக் கம்பெனிக்கு; பரமானந்தம் வீட்டுக்கு?”
“எதற்கோ?”—ஒரு மாதிரியாகக் கேட்டார் ராஜநாயகம். அருணாசலத்தை அல்லி புரிந்து கொண்டதை விட, அதிகம் புரிந்து கொண்டவரல்லவா. அவர்? பாம்பின் காலைப் பாம்பறியுமே!