தீபம்
85
பிரம்மாண்டமான தியேட்டர் வாசலில் நுழைந்து நின்றது அந்தக் கார். அல்லியும், அருணாசலமும் இறங்கினார்கள்.
“அல்லி!…அல்லி…”
“செந்தாமரையா?” அல்லியின் குரல் வியப்பு மேலோடியது.
“நீ ஆட்டம் பார்க்க வந்தியா?” என்றாள் செந்தாமரை. அல்லியை ஏறிட்டுப் பார்த்தாள். மின்னல் பாய்ந்தது.
“கண்டவங்க கிட்டெல்லாம் பேசிக்கிட்டு நிக்க வந்தியா?” என்று வெண்டியப்பன் அல்லியை நோக்கி முறைத்துப் பார்த்து விட்டு, செந்தாமரையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் .
‘கண்டவங்க’ என்று வெண்டியப்பன் சொன்னதைக் கேட்ட அருணாசலம், பொங்கியெழுந்தான். கையை ஓங்கவும் தயாராகி விட்டான். அடிக்கத் துடித்த அவனது கைகளைப் பிடித்தபடியே, “என்னப்பா அருணாசலம், யாரை அடிக்க இப்படித் துடிக்கிறே?” என்று விஷமமாகக் கேட்டதை உணர்ந்த அருணாசலம், திரும்பிப் பார்த்தான்.
சிரித்தபடியே நின்ற சாத்தையாவைக் கண்டதும், “அடேடே! சாத்தையாவா? நீ எப்போ பட்டணம் வந்தே? வரப் போறேன்னு ஒரு வார்த்தை கூட எழுதலியே?” என்றவாறு அருணாசலம், வெகு உரிமையுடன் அவன் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டான்.
அண்டசராசரத்தின் உயிர்ப்புச் சக்தி அடங்கி விட்டாற் போல, அல்லியின் ஐம்புலன்களும் ஒடுங்கின; அமைதியாயின. அல்லியின் முன் ஒரு பிரளயமே உருவானது போலிருந்தது.
“அல்லி என்ன உடம்புக்கு?” என்று திடுக்கிட்டு வினவிய அருணாசலம், தள்ளாடிய அல்லியைக் கீழே விழுந்து விடாமல் தாங்கியணைத்துக் கொண்டான்.