வழி
அன்று அலமுவுக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்ல முடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக் கடங்காமல் ஓடியது.
அவளருகில் இருந்த ஒற்றை விளக்கைச் சற்றுத் தூண்டினாள். உடல் வியர்க்கிறது. தேகம் என்னமோ ஒரு மாதிரியாக, சொல்ல முடியாதபடி தவித்தது.
அவள் விதவை. நினைவு ஐந்து வருஷங்களுக்கு முன்பு ஓடியது. ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி, வாழ்க்கை இன்பத்தின் முன்னொளி போலத் துரிதமாகச் சென்றது. பிறகு, அந்த நான்கு வருஷங்களும், பிணி வாய்ப்பட்ட கணவனின் சிச்ருஷை என்ற தியாகத்தில், வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக மாறி, வைதவ்யம் என்ற வாழ்க்கை அந்தகாரத்தைக் கொண்டு வந்தது.
அன்று முதல் இன்று வரை, வாழ்க்கையென்பது நாள் சங்கிலி. கணவன் தேகவியோகச் சடங்குகள், சம்பிரதாயம் துக்கத்தைத் தந்தாலும், பொழுதையாவது போக்கிற்று. அப்படிச் சென்றது ஒரு வருஷம்.
அன்று, அவர் இறந்த பதினாறு நாட்களும், இவளைப் பிணம் போல் அழும் யந்திரமாகக் கிடத்திச் சுற்றியிருந்து அழுதார்கள். அவள் உயிர்ப் பிணம் என்ற கருத்தை உணர்த்தவோ!
அலமு பணக்காரப் பெண்தான். பாங்கியில் ரொக்கமாக ரூ.20,000 இருக்கிறது. என்ன இருந்தாலும், இல்வாழ்க்கை அந்தகாரம்தானே? அவள் நிலை, உணவு இருந்தும் உண்ண முடியாது இருப்பவள் நிலை.
அவளுக்குத் தாயார் கிடையாது. தகப்பனார்; அவர் ஒரு புஸ்தகப் புழு. உலகம் தெரியாது. அவருக்கு வாழ்க்கை