பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாரியும் பூரியும்!

விடுதலை பெற்ற ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சட்டமும் வரலாறும் நமக்குக் கூறுகின்றன. ஆனால் உண்மையில் நாம் பலவகையாலும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம் என்று எண்ணி மனங்குமுற வேண்டியுள்ளது. அறிவியல் முன்னேற்றம் பற்றியும் உலக ஒற்றுமை பற்றியும் அரசியல் வாணிகர்கள் வானளாவப் பேசுகின்றனர். ஆனால் மக்கள் இன்னும் காட்டு விலங்காண்டிகளாகவே இருந்து வருவதைப் பார்த்து உளம் புழுங்க வேண்டியுள்ளது. ஒருபுறத்தே ஒருமைப்பாட்டின் உளறல்; மறுபுறத்தே குல மதக் கொடுமைகளின் கீழ்மை! மக்களைச் சமநிலைப்படுத்தும் முயற்சி ஒருபுறம்; மக்களுக்கு இழிவுசாற்றி அடிமைப்படுத்தும் தீமைகள் மறுபுறம், மதப் பித்தங்களும் குலவெறிகளும் இவ் விந்திய நாட்டை உலகத்தின் சாய்க்கடையாக மாற்றியிருப்பதைக் கண்டு நாண வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆரியாவர்த்தம், பாரத நாடு, மெய்யறிவுப் பிறப்பிடம் எனப் பெருமையாகப் பேசப்பெறும் இந்நாட்டைப் போல் கேடுகெட்ட நாடு உலகில் வேறு எங்கும் இல்லை என்று கூறும் வகையில் இங்கு ஒழுக்கக் கேடுகளும் வாழ்க்கைப் புரட்டுகளும் மண்டிக் கிடக்கின்றன. ஆரியப் பார்ப்பனர்களின் நச்சுரைகளால் இந்நாடு தூய்மையிழந்து ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளாகின்றன. அவர்தம் பொய்யுரைகளும் புரட்டுச் செயல்களும் இந்நாட்டு மக்களை மீளா அடிமைச் சேற்றிலும் அருவருப்புப் படிகுழியிலும் அழுத்தியிருக்கின்றன. முகமதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள நூல்கள் எதிலுமே குறிப்பிட்டிராத ‘இந்து’ என்ற ‘கற்பனைக் கலவை மதத்’தினால் இந்தியாவே தூய்மை யிழந்து கிடக்கின்றது. மக்களிடையே கலந்த இந்துமதம் என்னும் நச்சாறு துர்க்கப்பெற்று இந்நாடு தூய்மையுறுவது இயலுமா என்று