உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருயிர் மருந்து

ளளவும் அவன் புகழை நிலைநிறுத்தவேயாம் என்று கூறினள். மேலும் அவன் உள்ளம் துறவற நெறியில் செல்வதைத் தகைந்து அவன் நாட்டு மக்கள் அவன் வரவை எதிர்நோக்கி யிருப்பதையும் உணர்த்தினள்.

'அறமெனர் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியு உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்′

என்று விளக்கினள். அனைத்தையும் கேட்ட ஆபுத்திரன் 'என் நாட்டினும் பிறநாட்டினும் வேறு எந்த நாட்டினும், நன்னுதல் உரைத்த நல்லறம் செய்வேன்' என்று உறுதி கூறினான். மேலும் அவளை விட்டு நீங்க ஆற்றாது வருந்திய அவனை நோக்கி

‘புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இறங்கி நின்
மன்பெரு நன்னாடு வாயெடுத்து அழைக்கும்
வங்கத்து ஏகுநி'

என்று வேண்டினாள். பின் அவள் வாய்மொழியைத் தட்ட வகை யற்றவனாகி 'மன்னுர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளூம் நல்குவேன்' என்று கூறி, அவளிடம் விடைபெற்றுக் கப்பலில் புறப்பட்டான். அவளும் தான் சேரர் தலைநகராகிய வஞ்சி நோக்கிச் செல்வதாகக் கூறி அவனிடம் விடைபெற்றுக்கொண்டு விசும்பு ஆறாகப் பறந்து சென்றாள்.