உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆபுத்திரனுடன்

புகாரில் இறுதி நாள்

அறவண அடிகளுடைய அருள் மொழியைக் கேட்டு அனைவரும் அமைதி யுற்றிருந்தனர். அந்த வேளையில் மணிமேகலை தன் இடம் விட்டு எழுந்து அனைவரையும் வணங்கிப் பேசுவாளானாள். “அடிகளார் சொற்படி அரசியும் அன்னையும் சுதமதியும் சித்திராபதியும் வாழ்ந்து புத்ததேவன் அருளுக்கு உரியவராகுங்கள். நான் இனி இந்நகரில் இரேன். இருப்பின் அரசகுமரன் கொலைப்பட்டதற்குக் காரணமானவள் என்று பலரும் கூறும் வகையில் நான் வாழ நேரும். நான் உடனே ஆபுத்திரனது புண்ணிய நாடு சென்று அவனைக் கண்டு அவனையும் உடன் அழைத்துக்கொண்டு மணிபல்லவம் சேர்ந்து அவன் பழம் பிறப்பை உணர்த்தி, பின் அவனைவிட்டு நீங்கி வஞ்சியுட் புகுந்து என் தந்தையும் அன்னையும் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தைக் கண்டு போற்றி, நாடு முழுதும் சுற்றி உணவளித்தல் என்ற அற வேள்வியைச் செய்து வருவேன். எனக்கு ஏதேனும் இடர் வருமோ என்று அஞ்ச வேண்டா. நான் சென்று வருகிறேன்" என்று கூறி மறு முறையும் அனைவரையும் வணங்கி விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

நாகபுரம் நோக்கி

அனைவரிடமும் விடை பெற்ற மணிமேகலை நேராக உலக அறவியுள் புகுந்து அங்குள்ள சம்பாபதியையும், கந்திற் பாவையையும் போற்றி வலங் கொண்டு