பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


ஸ்டியோ சாலைகளிலே மோர் விற்கும் பானைகளிலே கள் விற்கின்றது’ என்றார்.

எடுத்துக்காட்டாக, உடலில் ஒரு புண் வந்தால் அதற்கு மருந்து போட்டால் புண் ஆறும்; மீண்டும் வேறோரிடத்தில் அதே புண் இடம் மாறி வரும். இந்தச் சிகிச்சையைத்தான் காங்கிரசும், கம்யூனிஸ்டும் செய்து வருகின்றன என்றார்.

ஆனால், தி.மு.கழகம் அத்தகைய சீர்திருத்தக் கட்சி அன்று. உடலிலே புண் ஏன் வந்தது; ரத்தம் கெட்டுள்ளதா? என்ற பரிசோதனைகளைச் செய்து, ரத்தம் கெட்டிருந்தால், கெட்ட ரத்தம் சுத்தமாவதற்கு மருந்து கொடுத்தால், புண் அறவே உடலில் வராது. இந்த சிகிச்சையைத்தான் தி.மு.கழகம் செய்கிறது என்றார் கவிஞர் கண்ணதாசன்.

தலைவராக வீற்றிருந்த ஜீவா அவர்கள், இடையிலே எழுந்தார்! மேடையிலே சிலம்பமாடியைப் போல சினம் பொங்கி, ஆடியாடி, பெருங்குரலெடுத்து, ‘யார் இந்த கண்ணதாசன்? என்னைப் போல சீர்திருத்தப் பணிகளுக்காகக் கல்லடிப் பட்டவரா? சாணியடிகள் வாங்கியவரா? ஏச்சுப் பேச்சுக்களைக் கேட்டவரா? என்ன தியாகம் செய்தார் - இவர் கம்யூனிஸ்டுகளுக்கு அறிவுரை கூற? என்றெல்லாம் ஜீவா பேச, அப்போது திருக்குறளார் வீ. முனிசாமி இறுதியாக எழுந்து பேசும்போது, கலைவாணர் அரையனா கொடுத்து ஆட விட்டு விட்டு, ஓரணா கொடுத்து ஓய வைக்கின்றார் பாவம்’ என்றார்.

கலைவாணர் நன்றியுரை கூறிய நேரத்தில், ஜீவா பேசுகின்றபோது யாராவது குத்தி விட்டால்தான் அவர் பேச்சு சூடேறும்; சுவையூறும்! அதற்கு ஆள் இல்லையே என்று எண்ணினேன். கவிஞர் கண்ணதாசன் கிடைத்தார்!” என்று பேசி எல்லாரையும் சிரிக்க வைத்தார்.

ஏன் இவற்றை இங்கே குறிப்பிட்டோம் என்றால், ஒரு பத்திரிகை ஆசிரியனுக்கு வீரமும் வேண்டும்; விவேகமும் வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; மக்கட் திரளின் மனதை நிறைவுப்படுத்தும் ஆற்றல், எழுத்திலும் எழுச்சி பெற வேண்டும்! பேச்சிலும் மூச்சாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான்!