பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்



வைகோ

‘சங்கொலி’

மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வரும் வை. கோபால்சாமி எனப்படும் ‘வைகோ’; சங்கொலி பத்திரிகை ஆசிரியராகி, அதை வார இதழாக்கி, ம.தி.மு.க.வின் கொள்கை பரப்பும் ஏடாக நடத்தி வருகிறார். ஒரு தின ஏடு நடத்தும் கட்சிப் பணியை வார இதழ் ஒன்று நடத்துகிறது என்றால், அதற்குப் பொறுப்பாசிரியராக இருக்கும் க. திருநாவுக்கரசின் தனித்திறமை ஆகும்.

திராவிடரியக்கத்தின் ஆரம்பக் காலத்தில், அதாவது 1944-ம் ஆண்டு முதல் 1967 வரை எவ்வாறு திராவிடர் இயக்கப் பத்திரிக்கைகள் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டு வந்தன என்பதற்குரிய அடையாளம் தேவையா? இன்றைய 24 பக்கம் அளவுடன் வெளிவந்து கொண்டிருக்கும் டபுள் டெம்மி 1 x 4 அளவுள்ள ‘சங்கொலி’ வார இதழை வாங்கிப் படித்துப் பார்த்தாலே போதுமானது.

திராவிடர் இயக்கப் பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி - வீழ்ச்சிகளை அனுபவித்தவர்களுக்குத்தான் அந்த அரிய பயிற்சிகளின் அருமைகள் புரியும்; பெருமைகள் தெரியும்.

‘சங்கொலி’ இதழ், தோற்றம், அழகுமிகு தலைப்புகள், கட்டுரைக் கருத்துக்கள் எல்லாமே அறிஞர் அண்ணா காலத்து வடிவமாக அமைந்து தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கின்றது. ‘திராவிட நாடு, முரசொலி, தென்றல், தீப்பொறி, எரியீட்டி, சவுக்கடி, மாலை மணி போர்வாள் போன்ற ஏடுகள் எப்படிப்பட்ட பரபரப்பையும் விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் அன்று உருவாக்கிக் கொள்கை பரப்பும் பரணியைப் பாடினவோ, அதையே இன்றும் ‘சங்கொலி’ முழக்கம் எழுப்பி, சங்க நாதம் செய்து வருகின்றது. அதற்கு வைகோவின் புயல்வேகப் பேச்சும், எழுத்தும், கழக யூக வியூக ஆக்கப் பணிகளும்தான் விதைகளாகும்.

அட்டாவதானி என்றால் எட்டு வகைச் சிந்தனையில் காரிய சித்தி ஆற்றுபவர்; தசாவதானி என்றால் ஒரு காரியத்தைப்