பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

35



இரத்தம் உடலின் பல பாகங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் மாற்றங்களைக் கண்டுபிடித்தவர் கேலன் Galen என்ற கிரேக்க மேதை. இவர் கி.பி. 130 முதல் 199 வரை வாழ்ந்தவர்.

சிரை ரத்த நாளங்கள் உணவை ரத்தத்துடன் கலக்கச் செய்கின்றன. இரத்தம் கல்லீரலை அடையும்போது இயற்கை குணத்தையும், இதயத்தில் செல்லும்போது ஜீவாதார குணத்தையும், மூளைக்குள் போகும்போது மிருக குணத்தையும் பெற்று உடல் இயக்கத்திற்கு வழி செய்கிறது என்று கேலன் கூறிய அற்புத ஆராய்ச்சிச் செய்தி; மருத்துவ உலகுக்கு பெரும் உதவியாக; திருப்புமுனையாக அமைந்தது. தசைகள் சுருங்கி நீள்வதால் உடல் அசைவு உண்டாகிறது. அதற்கு நரம்புகளே காரணம் என்ற செய்தியைக் கூறி மருத்துவ உலகில் பெரும் புகழ் பெற்றவர். இவையெல்லாம் அன்றைய மக்கள் தெரிந்து கொண்ட செய்திகள் அல்லவா?

கிரேக்க நாகரிகம், கிரேக்க மேதைகள் பலரை உலகுக்குக் கொடைகளாக வழங்கியச் செய்திகளை இன்றும் - உலக வரலாறும் - கிரேக்க வரலாறும் வாழ்த்திக் கொண்டிருப்பதை நாம் படித்து கொண்டே வாழ்கிறோம்.

ரோமானிய நாகரிகம்

கிரேக்க நாட்டில் உலகம் வியக்கத்தக்க சிந்தனையாளர்கள் ஒவ்வொரு துறையிலும் தோன்றி சாதனைகள் பல படைத்துள்ளதைப் போல, ரோமாபுரி நாட்டிலும் சில அரிய சாதனையாளர்கள் குறைவாகவே தோன்றினார்கள். அதனால், ரோமானியப் பேரரசு பழமை மிக்க உலகப் பேரரசுகளுள் ஒன்றாகவே இருந்தது.

ரோமானியர்கள் இத்தாலி நாட்டின் வளத்தைப் பெருக்கியவர்கள். பண்டைய எகிப்தியர், கிரேக்கர் நாகரிகங்களின் பயனை அவர்கள் அனுபவித்தவர்களாவர்.

ரோமானிய தத்துவம், சிசிரோ, உலுக்கிரிட்டிய்ஸ், மார்க்ஸ் அரேலியஸ், செனக்கா போன்றவர்களது கருத்துகளால் உருவாயிற்று.