பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

சுந்தர சண்முகனார்



ஒரே நேரத்தில் முருகனும் கண்ணனும் கூவினர் என்றால், இந்த உம்மைகள் எதையும் தழுவாததால் எண்ணும்மைகள் எனப்படும். முருகனும் கூவினான் - கண்ணனும் கூவினான் என இரண்டு தொடர்களாகக் கூறினால் தான் நிகழ்வது தழுவியதாகும். இந்தப் புதுக் கண்டு பிடிப்பாகிய நிகழ்வது தழீ இய எச்ச உம்மைக்கு இலக்கிய ஆட்சி ஒன்று காண்போம்.

கம்பர் ஒரு காதல் காட்சியைப் படைத்துக் காண்பித்துள்ளார். சீதை மாளிகையின் மேல் தளத்தில் தோழியருடன் நின்றுகொண்டிருக்கிறாள். அந்த மாளிகைத் தெருவில் இராமன் விசுவாமித்திரருடனும் இலக்குவனுடனும் சென்று கொண்டிருக்கிறான்.

தற்செயலாக இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொள்கின்றனர், நோக்கம் ஆரம்பக் கட்டத்திலிருந்து ஆழ்ந்த கட்டத்திற்குப் போய்விட்டது. சீதையின் இரு கண்களாகிய இரு வேல்கள் இராமனின் தோள்களில் ஆழ்ந்து பதிந்தன. இராமன் கண்களோ சீதையின் மார்பகத்தில் தைத்துக் கொண்டன.

கயிறு இழுப்புப் போட்டியில் இருவர் இரு பக்கலில் நின்றுகொண்டு கயிற்றை இழுப்பர், ஒத்த வலிமையினராயின் அவரவரும் அவரவர் இடத்திலேயே இருப்பர். ஒருவன் மற்றவனினும் மெலியவனாயின், அவன் வலியவன் பக்கம் இழுக்கப்பட்டு விடுவான், இதுதான் இயற்கை நிலை. ஆனால் சீதையும் இராமனும், நோக்கு என்னும் கயிற்றால் உள்ளம் என்னும் கைகொண்டு ஒருவரை ஒருவர் இழுத்தனர். ஆனால் இயற்கைக்கு மாறாக இருவருமே ஒருவரிடத்தை மற்றவர் அடைந்தனர். அதாவது, சீதையின் இதயத்தை இராமனும் இராமனது இதயத்தைச் சீதையுமாக மாறி அடைந்தனர். முதல் காட்சியிலேயே முற்றிய நிலைக்குப் போய் விட்டது என்னவோ போல் இருக்கிறது.