பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

57




தாழ்ந்திடும் நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ; உயிர் நான் மறப்பேனோ

செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தாயெனில் நைந்து போகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே

முந்தைய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!”

இந்தப் பாடலைக் கேட்ட பின்னர் பாவேந்தர் மீது எனக்கிருந்த பகையுணர்வு சிறிது சிறிதாகக் குறைந்து. பின்னர் அறவே மறைந்தது. அவர்பால் எனக்கு ஒருவகைப் பற்று ஏற்பட்டது. கார் இருளில் மின்னல்போலப் பகைமையிடையே இந்தப் பற்று ஏற்பட்டது. ஆனால், மின்னல் போல் மறைந்து விடாமல் இன்று வரையும் நீடித்து நிலைத்திருக்கின்றது. பகைவனை மயக்கிப் பகை மாற்றிய சிறப்புப் பாடலாகும் இது. இந்தப் பாடல் ஒன்றே கவிஞரின் புகழுக்குச் சான்று பகரப் போதுமே! அவரது தமிழ்ப்பற்றை என்னென்று வியப்பது!

1.2 நாட்டுப் பற்று

பாவேந்தர் என்னிடம் கூறிய மிகவும் சுவையான செய்தி ஒன்று உள்ளது. இதை நான் கூட்டங்களில் கூடக் கூறியிருக்கிறேன். அதாவது:

பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியை ஆண்டு கொண்டிருந்த போது, (பிரிட்டிஷ்) இந்தியாவில் விடுதலைப் போராட்டம்