பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

117


ஆனால் மடத்தை (திருபுவனந்தான்) சேர்ந்தவர்கள் தங்களைத்தான் கேட்க வந்திருந்தார்கள் என்று எப்படியோ எண்ணிவிட்டார்கள். அதுவும் நல்லதாய்ப் போயிற்று.

சீவைகுண்டம் சின்ன ஊர்தானே. விழாவுக்காகப் புத்தக ஆலயக் கட்டிடத்தில் (சிறு கட்டிடம், சிறு முற்றம்), பாண்டு, மேளம், கிராமபோன் ஒலிபரப்பி மூன்றுமாகச் சேர்ந்து கூப்பாட போட ஆரம்பித்தன. மூன்று மணிக்கே ஆரம்பித்துவிட்டன. வேறு என்ன வேண்டும் விபத்து. கூட்டம் ஒரே கூட்டமாய்க் கூடிவிட்டது. பத்து வயசுப் பையன்கள் பெண்கள் மற்றும் வயசான மாதர்கள் எல்லாருமாகக் கூடிவிட்டார்கள். இருக்க இடமில்லை. நிற்க இடமில்லை. கூச்சல் போட்டால் சொல்லி முடியாது. வேலூருக்குக் கேட்டிராதுதான்.

சபை ஆரம்பித்த 6.30 மணிக்குத்தான் நெருக்கமும் கூச்சலும் உச்சத்தை அடைந்திருந்தது. இந்தக் களேபரத்தில் நானாவது பேசவாவது என்று பயந்தேன். ஏன் குமரகுருபரர் 5வது வயசுவரை பேசிய மாதிரி பேசிவிட வேண்டியதுதான். அதாவது ஊமையாய் இருந்துவிடவேண்டியது என்று முடிவுகட்டிவிட்டேன்.

ஆனால் நாம் ஒன்று நினைக்கக் கடவுள் வேறொன்று நினைக்கிறது என்ற முறையில் விமோசனம் ஏற்பட்டது.

என்னுடைய முகவுரையாக சில வார்த்தைகள் முடிந்ததும், குமரகுருபரரது பாடல்களையும் பிரபந்தங்களையும் சுவைத்துக் குடித்த ஒரு சுவாமிகளும் ஒரு பண்டிதரும் பேசினார்கள். அந்தச் சொற்பொழிவுகளின் பயனாக மேலே சொன்ன பக்தகுழாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தப்பி வெளியே ஓட ஆரம்பித்தன. ஒன்றரை மணி நேரத்தில் இடத்தைக் காலி பண்ணிவிட்டன.