இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரவும் பகலும்
நள்ளிருள். திருப்பாதிரிப்புலியூரில் ஒரு சைன மடத்தில் இருந்த தருமசேனர் துடியாய்த் துடிக்கிறார்.வயிற்றிலே தோன்றிய சூலை நோய் அவரால் பொறுக்க முடியவில்லை. குடலையே புரட்டி முடங்கச் செய்தது அந்த நோய்.எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்துவிட்டார்கள்.மந்திரமும் பார்த்தார்கள். தண்ணீரை மந்திரித்துக் குடிக்கச் செய்தார்கள்; தீரவில்லை. மயிற்பீலியினால் உடம்பெல்லாம் தடவி மந்திரித்தார்கள்; அப்போதும் தணியவில்லை. "இனி என்ன செய்வோம்!" என்று ஒன்றும் தெரியாமல் சைனர்கள் ஏங்கினார்கள்.
அப்போது தருமசேனருக்குத் தம்முடைய தமக்கையின் நினைவு வந்தது. திருவதிகைத் திருக்கோயிலில் சிவத்தொண்டு புரிவதையே தம் வாழ்க்கைப் பெரும்பணியாக வரையறுத்துக் கொண்டு அந்த அம்மையார் ஒரு திருமடத்தில் வாழ்ந்துவந்தார். தருமசேனர் தம்முடைய சமையற்காரனைத் தம் தமக்கையிடம் தம் உடல் நிலையை எடுத்துரைத்து வரச் சொல்லி அனுப்பினார், அவன் அப்பெருமாட்டியிடம் சென்று சொல்லவே, "நான் அங்கே வரமாட்டேன் என்று அவர் சொல்லியனுப்பிவிட்டார். அது கேட்ட தருமசேனர் தாமே தம் தமக்கையாரிடம் செல்லத் துணிந்தார். எல்லோரும் நன்றாகத் தூங்குகிறார்கள். தருமசேனர் மாத்திரம் தூங்கவில்லை. சூலை நோய் அவரைத் தூங்கவிட வில்லை. புழுவாய்த் துடித்துக்கொண்டிருந்தார். இன்னது செய்வதென்று தெரியாமல் அவர் மனம் சுழன்றது.