உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரவும் பகலும்

3


கொண்டு வழிபட்டுப் போற்றினாலும் பழைய வாசனையும் குடிப்பிறப்பின் ஆற்றலும் அவருடைய உள்ளத்திலே சிவபிரானுடைய நினைவை மறவாமல் இருக்கச் செய்தன. அந்த நினைவை மறக்க முயன்றும் அவரால் முடியவில்லை.
இந்த நள்ளிருளில் மந்திரமும் மருந்தும் சைனரும் தம்மைக் கைவிட்டு நிற்கத் தம் மனத்தில் என்ன முயன்றும் சிவபெருமானுடைய நினைவு நீங்காதிருத்தலை எண்ணிப் பார்த்தார். தம்முடன் பிறந்த திலகவதியாரிடம் போனால் தம் நோய் நீங்கும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.
ஆகவே யாரும் அறியாமல் எழுந்தார். வெள்ளை ஆடையால் உடம்பெல்லாம் போர்த்துக்கொண்டார். திருப்பாதிரிப்புலியூரிலிருந்து புறப்பட்டுத் திருவதிகையை நோக்கி நடக்கலானார்.
சைனசமயப் பற்று அப்போதே அவரிடமிருந்து அகன்றது. உயிருக்கு மோசம் வரும் என்ற அச்சம் அவருக்கு உண்டாகிவிட்டது. வழி வழி வந்த பெரும் பற்றாகிய சிவபெருமானைப் பற்றினால் உய்யலாம் என்ற எண்ணம் வலிமை பெற்றது.
மெல்ல மெல்ல நடந்து திருவதிகை வந்தார். திலகவதியார் இருந்த மடத்தை விசாரித்துக்கொண்டு சென்று உள்ளே புகுந்தார். திலகவதியார் காலில் வீழ்ந்து, "ஐயோ! என்னால் இந்தச் சூலை நோயைப் பொறுக்க முடியவில்லையே! நான் கரையேறும் நெறியைக் காட்டவேண்டும்" என்று சொல்லி அழுதார். திலகவதியார் அவரை எழுப்பி, "இறைவன் திருவருளால்தான் இது நீங்க வேண்டும். அவனுக்குத் தொண்டு செய்வாயாக" என்று கூறித் திருவதிகை வீரட்டப்பெருமான் சந்நிதிக்கு அவரை அழைத்துச்செல்ல எண்ணினார். இறைவனுடைய திருவைந்தெழுத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/12&oldid=1866949" இலிருந்து மீள்விக்கப்பட்டது