உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இரவும் பகலும்

வில்லை. அவை என் நினைவிலே என்றும் இருந்துகொண்டே இருந்தன" என்று பாடினார்.
சூலை நோய் தம்மைப் படுத்தும் பாட்டையெல்லாம் பாடினார். "என் குடலையே சுருட்டிப் பிடிக்கிறதே! நஞ்சாகி வந்து நலிகின்றதே! சுடுகின்றதே! என் வயிற்றைக் கலக்கிப் பறித்துப் புரட்டி அறுத்துக் கவர்ந்து தின்னுகிறதே!" என்று தம்முடைய வேதனையை எடுத்துச் சொன்னார்.
இறைவன் திருவருளால் அவர் வயிற்று வலி நின்றது. அவருக்குப் புதிய உயிர் வந்ததுபோல இருந்தது. ஒரு கணமேனும் தம்மை விடாமல் நலிந்து கொண்டிருந்த அந்த நோய் எவ்வாறு போயிற்று? அவர் வியந்தார்; மயங்கினார்; இறைவன் திருவருளென்று எண்ணித் தெளிந்தார். அங்க முழுவதும் புளகம் போர்த்தது. கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தது. ஆனந்தம் தாங்காமல் மீட்டும் மண் மேல் புரண்டு அயர்ந்தார். "அடியேன் செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்து ஆட்கொண்ட கருணை வெள்ளத்துக்கு நான் தகுதியானவனா?" என்று உருகினார். சிவபிரானைத் தாம் விட்டாலும் அப் பெருமான் தம்மை விடவில்லை என்ற உண்மையை அவர் உணர்ந்தார்.
அப்போது அசரீரியாக, "திருப்பதிகம் பாடிய பான்மையினால் திருநாவுக்கரசு என்ற நாமம் உனக்கு அமைவதாகுக!" என்று ஓரொலி எழுந்தது. அதுமுதல் மருள்நீக்கியார் திருநாவுக்கரசர் ஆனார்.

இனி அவர் பாடிய பதிகத்தின் முதற் பாட்டைப் பார்க்கலாம்.
இறைவனிடம் மருள்நீக்கியார் வந்ததற்குக் காரணம் அவனுடைய திருவருளாக இருந்தாலும், அந்தத் திருவருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/15&oldid=1867255" இலிருந்து மீள்விக்கப்பட்டது