இரவும் பகலும்
7
அவரிடம் சூலையை உண்டாக்கி இழுத்தது. ஆதலின் சூலையே காரணம் என்று சொல்லவேண்டும். அந்தச் சூலையினால் மருள்நீக்கியார் பட்ட துயர் சொல்லுக்கு அடங்காதது. சிறிது வேதனை தந்துவிட்டு மறைந்துவிடும் நோயாக அது இருக்கவில்லை. உயிரையே கொண்டுபோகும் அளவுக்கு அதன் வலிமை இருந்தது. உயிரைக் கொண்டு போகிறவன் கூற்றுவன் என்று சொல்வார்கள். அந்தக் கூற்றுவனே சூலை நோயுருவத்தோடு வந்துவிட்டானோ! ஆம்! சூலை வெறும் நோயாக இருக்கவில்லை; அது கூற்றேயாக இருந்தது. அதை விலக்க யாரும் இல்லையென்றுதான் மருள் நீக்கியார் எண்ணியிருந்தார். ஆனால், கூற்றுவனையே தன் காலால் உதைத்து விலக்கிய சிவபிரானிடம் இப்போது வந்துவிட்டார். கூற்றுவனையே விலக்கினவனுக்குக் கூற்றைப்போன்ற நோயை விலக்குவது அரிதா? அவன் இது காறும் விலக்காமல் இருந்தான்.
"எம்பெருமானே! இந்த நோய் நோயாகவா வந்திருக்கிறது? கூற்றாக அல்லவோ வந்திருக்கிறது? இதைத் தேவரீர் விலக்காமல் இருக்கிறீரே!" என்று தொடங்குகிறார் மருள்நீக்கியார்.
கூற்றாயின வாறு விலக்ககலீர்.
முதலில் கடவுளைத் துதிக்கவில்லை; கடவுளே என்று விளிக்கவில்லை. எடுத்த எடுப்பிலே, "ஐயோ! யமனைப் போல வந்திருக்கிறதே; இதை நீர் போக்கவில்லையே!" என்று முறையிட்டுக் கொள்கிறார். "ஐயோ! பசி பசி!" என்று பசியிலே உழந்தவன் அலறுவதைப் போலக் கதறுகிறார். அவருக்கு ஒவ்வொரு கணமும் அந்த நோய் வேதனை தாங்க முடியாமல் கொக்கி போட்டு இழுக்கிறது. வயிற்றைப் பிடித்துக்கொண்டு கதறுகிறார். முதலில் தம் வேதனையைச் சொல்லி அழுகிறார்.