இரவும் பகலும்
11
இதன் பெயர் நீண்டும் ஒலிக்கும். அதியரைய மங்கையென்ற பெயருடையது, கெடில நதிக்கரையில் உள்ளது, வீரட்டத்தில் ஒன்று என்ற மூன்று செய்திகளையும் அந்த நீண்ட திருநாமம் புலப்படுத்துகின்றது.
மருள்நீக்கியார் அதிகை வீரட்டானத்தில் உறைகின்ற ஐயனைப் பார்த்துக் கதறிய கதறல் தேவாரத்தில் நான்காம் திருமுறையில் முதற் பதிகமாக இருக்கிறது. அந்தப் பதிகத்தைப் பாடியதற்குமுன் மருணீக்கியாராக இருந்த அப்பெரியார் அதற்குப்பின் சூலை நோய் நீங்கித் திருநாவுக்கரசர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். அப்பெயரே வடமொழியில் வாகீசர் என வழங்கும். சொல்லுக்குத் தலைவர் என்பது அதன் பொருள்.
கூற்றாயின வாறு விலக்ககலீர்;
கொடுமைபல செய்தன; நான்அறியேன்;
ஏற்றாய் அடிக் கே; இர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்;
தோற்றாதுஎன் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன்அடி யேன்;அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே!
[திருவதிகையில் கெடில நதிக்கரையில் வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனே! கூற்றுவனாக இந் நோய் வந்திருப்பதை விலக்காமல் இருக்கிறீரே! நான் செய்தனவாகிய கொடுமைகள் பல உண்டு; நான் அவற்றின் பயனை முன்னம் அறியவில்லை இப்போது நீ என்னை நின் திருவடிக்கண் அடிமையாக ஏற்றுக்கொண்டாய். இனி இரவும் பகலும் நின்னைப் பிரியாமல் எப்போதும் வணங்குவேன். புறத்தே கண்ணுக்குத் தோற்றமல் வயிற்றின் உள்ளிடத்தில் குடலோடு பிணைத்துக் கிடந்து, யாதொரு செயலும் செய்யவொட்டாமல் என்னை