52
இதயம்
அரசனை எதிர்ப்பது, அவன் ஆட்களை எதிர்ப்பது என்பதெல்லாம் முறை அல்லவே. ஏன் வீணாக ஆபத்தையும் பாபத்தையும் தேடிக் கொள்ளுகிறீர்கள்?” என்று ஆடவர்களுக்கு அன்பு கலந்த அறிவுரையை, அழுத கண்களைத் துடைத்துக் கொண்டு கூறிவந்தவர்கள்தான், ஆரணங்குகள்!
‘விதியே எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம்’ என்ற தத்துவத்தைத் தேவாலயத்தார் மறந்தாலும், இந்தத் தையலர் மறப்பதில்லை!
“உழைப்பைத் திருடி உல்லாசமாக வாழுகிறார்கள். உலுத்தர்கள் என்று ஆடவர் பேசிடும்போது, உள்ள கஷ்டம் போதாதென்று இந்தப் பாபமும் வேறு வந்து சேருகிறதே” என்றெண்ணிக் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கிடந்தவர்கள் தான் அந்தப் பெண்கள்.
ஆனால், அவர்களும் மாறிவிட்டார்கள், ஆடவரே கண்டு ஆச்சரியப்படத்தக்க விதத்தில், ஏன் மாற மாட்டார்கள்!
கசையடியால் உடலெங்கும் இரத்தம் பீறிட்ட நிலையில், பண்ணைமேட்டிலே வீழ்ந்து கிடந்த தகப்பனை, துடிக்கத் துடிக்க, அலற அலறத் தாக்கி, சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட கணவனை முளையிலேயே இந்தப் போக்கிரித் தனமா என்று ஏசி முரட்டுப் பணியாட்கள் தாக்க, ‘ஐயோ! அம்மா! கொல்லுகிறார்களே!’ என்று கதறி ஓடிவந்து காலடி வீழ்ந்தமகனைக்கண்டபிறகு, மாறாமல் எப்படிஇருப்பார்கள்? மாறிவிட்டார்கள்! எந்த அளவுக்கு என்றால், இந்த ஆடவர்கள், சந்துமுனை நின்று பேசுவார்கள், உருட்டுவிழி காட்டினால் ஊராள்வோர் வழிக்குவந்துவிடுவார்கள் என்றெண்ணி ஏமாந்து கிடப்பார்கள்; செயல்படத் தயங்குவர் என்று கேலி பேசிவிட்டு, பெண்டிரெல்லாம், திரண்டு ஒன்றுகூடி, “இதென்ன பேயாட்டமாடுகிறார்களே” என்று அரண்மனையுள்ளோரும் மாளிகைக்காரரும் மருண்டு கூறிடத்தக்க விதத்தில், கிடைத்ததைக் கரத்தில் எடுத்துக் கொண்டு, ஆத்திரம் தீர ஏசிக் கொண்டு, அரண்மனை நோக்கிப் படை எடுத்துச் சென்று, துப்பாக்கி காட்டியவரைத் தூ! தூ! என்