389
சில வேறுபாடுகள்
எகர ஒகரம் புள்ளி பெறுதல் பழவழக்கு. மெய்யும் அவ்வாறே. ஆனால் மெய்யின் வடிவம் அவ்வாறே இருக்க எ, ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும், இடாக்கால் நெடிலாகவும் வழங்கலாயிற்று. இதற்காக இராமாநுசக் கவிராயர் நன்னூல் பதிப்பில் திருத்தியமை கண்டுள்ளோம். வீரமாமுனிவர்,
“நீட்டல் சுழித்தல்
குறில்மெய்க் கிரு புள்ளி”
என்கிறார் (12). “எ, ஒ, க், ங், ச், ஞ்” என்பவை அவர் தரும் எடுத்துக்காட்டு. ஏகாரக் கீழ்க் கோடும்,ஓகாரச் சுழியும் அவர் தந்தது என்னும் வழக்கு இந்நூற்பாவால் மேலாய்வுக்குரியதாக அமைகின்றது.
இவர் கூறும் அகப்பொருள், புறப்பொருள் புதுமைய.
“அகத்திணை இயல்பே அறைபடும் வகையே
பொதுச்சிறப் புவுமை புறநிலை எதிர்நிலை
கருவி காரியம் காரகம் முன்னவை
பின்னவை எனவாம் பிரிவீ ராறே” (151).
“புறத்திணை ஒழுக்கம் நூல்புறக் கரிமூன்றே”
என அவற்றைக் கூறுகிறார். வழிவழி வரும் அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்து அதிகாரத்தை நிறைவிக்கிறார். அகத்திணை முதற் பொருள் கருப்பொருள்களைப் பற்றிக் கூறும் இவர், உரிப் பொருளைச் சொல்லவும் இவர் துறவு இடந்தரவில்லை போலும். அணியதிகாரத்தில் சொல்லணிக்கு முன்னுரிமை தருகிறார். இவர் பார்வைப் புதுமை. நூலில் எங்கும் தெரிகின்றது.
அதிகாரத் தொடக்கங்களில் வணக்கமும் வருபொருளும் அமைத்து அதிகாரப் பொருளை விளக்குகிறார். நிறைவில் இவ்வதிகாரத்து இன்ன கூறப்பட்டதென்பதைக் கூறி முடிக்கிறார்.