இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
ஏற்பச் சுட்டாமல் விடுத்திருத்தலும் கூடும். ஆதலால், முந்தையோர் நூல்களில் பரவிக் கிடந்தவற்றையும் மறைந்து கிடந்தவற்றையும் வழக்கிடையில் அறியப் பெற்றவற்றையும் ஒருங்கு திரட்டி ஓர் ஒழுங்குற அமைத்துச் செவ்விய வடிவில் வழங்கியமையே அவர் காலத்தால் செய்த ஞாலத்தின் மேம்பட்ட பணியாகும். இதனைத் தெளிந்த இலக்கணர் ஒருவர்,
“தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்”
எனத் தொல்காப்பியப் பணிப் பிழிவைப் பாகுக்கட்டியாக்கிக் கையிடைத் தந்தார்.
தொல்காப்பியர் முந்து நூல்களின் வழியே நூல் செய்தார் என்பதும், அதற்கு எண்ணற்ற அகச்சான்றுகளை அள்ளிக் கொள்வார் கொள்ளும் வண்ணம் அவரே வழங்கியுள்ளார் என்பதும், அவர்க்கு அகத்தியம் முதனூல் என்று உரையாசிரியர்கள் கூறும் புறச்சான்றுக்கு நூலிலோ, பாயிரத்திலோ குறிப்பாகவேனும் செய்தியில்லை என்பதும், முந்து நூல் ஒரு நூல் அன்று; பல நூல்கள் என்பதும் இவண் அறியப் பெற்றவையாம்.