பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 புலவர் கா. கோவிந்தன்



விட்டு, அனைவரும் வடக்கிருந்து நோற்கத் தொடங்கினர்.

தன் ஆருயிர் நண்பன் கோப்பெருஞ் சோழனுக்கு உற்றது அறிந்தார் ஆந்தையார் உறையூருக்கு ஒடோடி வந்தார். ஆனால் அந்தோ! அவர் வருவதற்கு முன்னரே அரசன் வடக்கிருந்து நோற்றலை மேற்கொண்டது அறிந்து வருந்தினார். வருந்தி என்ன பயன்! தாமும் அவனோடு வடக்கிருக்கத்துணிந்தார். அரசன் கருத்தும் அஃதே ஆதல் அறிந்து மகிழ்ந்தார். அவன் ஒதுக்கிய இடத்தே இருந்து உயிர்விட்டார். “வருவார்” என்று கூறிய வேந்தன் சொல் வன்மையினையும், அவன் சொல் பழுதாகாவண்ணம் வந்து வடக்கிருந்த புலவர் பேரன்பினையும் வியந்து வியந்து பாராட்டினர் மக்கள்.

கோப்பெருஞ் சோழன் தந்தை யாரோ? பிசிராந்தையார் தந்தை யாரோ? அவன் தாய் யாரோ? அவர் தாய் யாரோ? அவன் பிறந்த - இடமோ சோழ நாடு; அவர் பிறந்த இடமோ பாண்டிய நாடு. இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவர் அல்லர்; ஒருவரோ டொருவர் பழகினாரல்லர்; இருவர் உள்ளமும் ஒன்றுபட்டன; அவ்வளவே. இந்நிலையில் இருவர் உயிரும் ஒன்று கலக்கும் உயரிய நண்பராகிவிட்டனர். இதுவன்றோ உண்மை நட்பு! இவ்வாறு உயர்ந்த உண்மை நட்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய வேந்தன் உரைத்த விழுமிய அறத்தின் வழிச்சென்று வாழ்வு பெறுவோமாக!