68
வ.சுப. மாணிக்கனார்
நாய் ஒழியப்பிறபொருள் தனக்கு உவமையாகாது எனவும் அந்நாயையும் தம் இழிவுக்கேற்ற அடைகொடுத்து உவமையாகப் படைத்துக் கொண்டாலல்லது இயற்கை நாம் உவமையாகாது எனவும், திருவாசகர் கருத்தாதல் பெறப்படும் நாயொன்றையே உவமையாக ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், அடிநாயேன், நாயடியேன், நாயினேன் என்றெல்லாம் தம்மையே ஏன் நாயாக ஆக்கிக் கொள்ள வேண்டும்? உலகம் அறிந்தநாயின் பண்பு செய்ந்நன்றியுடைமை. அந்நாய்ப்பண்பு தம்பால் இல்லையே என்பது மணிவாசகரின் கவற்சி. நான்தனக் கன்பின்மை நானுந்தானும் அறிவோம் தானென்னை யாட்கொண்டது எல்லாரும் தாமறிவார் ஈறி லாதநீ யெளியை யாகிவந்து
ஒளிசெய் மானுட மாக நோக்கியும் கிறி லாதநெஞ் சுடைய நாயினேன்
கடைய னாயினேன் பட்ட கீழ்மையே
இவ்வாறு உலகம் அறியவந்து தன்னை எளிமையாக ஆட்கொண்ட திறத்தைத் தான் மதிக்கவில்லையே. நாய்க்குத் தவிசிட்டாற்போல, தனக்குத் தகுதியில்லாத பெரும்பதத்தை அருளிய பெம்மானைத்தான் நன்றியோடு நினைக்கவில்லையே என்று மணிவாசகர் துடிக்கும் திருவாசகக் கதறலை நாம் பல செய்யுட்களிற் பார்க்கின்றோம். நன்றியுடைய நாயாக இருக்க வேண்டிய நான் நன்றி கெட்ட நாயாக இருக்கின்றேனே: எப்போது நல்ல நாயுணர்வு எனக்கு வருமோ என்று மணிவாசகர் இரங்குகின்றார். செய்ந்நன்றியுணர்வு எல்லாக் குணங்களிலும் தலையாய குணம் எனின் அந்நன்றிக்கேடு எல்லாக் குற்றங்களிலும் தலையாய குற்றம் என்பது பெறப்படும். காமம் மிக்க சச்சந்தன் கட்டியங்காரனிடம் அரசாட்சியைக்கொடுத்தான்; நாய்போல் நன்றியுடையவனாக இருப்பான் என்று நம்பினான் சச்சந்தன். கட்டியங்காரனோ நம்பிக்கைக்கேடு செய்து சச்சந்தனைக் கொன்று அரசைக் கைப்பற்றினான். இவ்வாறு நம்பிக்கைக் கேடியாகிய கட்டியங்காரனை,