'அன்புகொள் மடப்பேடை யசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும் புறவு'
இரை தேடிச் சென்றிருக்கும் ஆண் புறாவானது உரிய காலத்தில் வந்து சேராது போகவே, பெண் புறா பேதுற்றுக் கலங்கி அதனை நினைந்து கூவும் என்று குறுந்தொகை கூறும் செய்தியும், தன் காதலன்புடைய ஆணோ பெண்ணோ பிரிந்தால் அப்பிரிவினை ஆற்றாது மரக்கிளையில் தனித்திருந்து தனது துணையைக் கூவிக் கூவி அழைத்துக் கத்தும் என்று பத்துப்பாட்டில் காணும் காட்சியும் படிப்போருக்குப் பரவசம் ஊட்டுகின்றன.
பருந்து
பருந்து பாலை நிலத்திற்குரிய பறவையாகும். இப்பறவை பிணந்தின்னும். சமயம் பார்த்துக் கோழிக் குஞ்சுகளையும் சிறு பறவைகளையும் கவர்ந்து சென்று கொன்று உணவாகக் கொள்ளும் திறனுடையதாகும்.
பருந்துக் குடும்பம்
நிற்க நிழலில்லாத பாலை நிலம். அதன் நடுவே ஓங்கி வளர்ந்து ஒரு ஒமை மரம். அதன் உச்சியிலே பெரிய கிளை ஒன்றில் ஒரு பருந்தின் கூடு. பெண் பருந்து குஞ்சு பொரித்திருக்கிறது மேலும் கூட்டைவிட்டு நீங்காது தன் குஞ்சுகளைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறது பெண் பருந்து ஆனால் பசியோ வயிற்றைக் கிள்ளுகின்றது.உணவுக்கு என்செய்வது? குடும்பப் பொறுப்பைக் கொண்டுள்ள ஆண் பருந்தோ குஞ்சுகளைப் பெற்றெடுத்ததினால் களைப்புற்றிருக்கும் தன் பேடையினை விட்டுப் பிரிய விரும்பவில்லை. ஆனால் தன் பேடையின் பசித்