-28-
கேட்கலாம். அவ்வாறு எவரும் சொல்லவில்லை. தேவையும் தேவையின்மையும் மக்களின் மெலிந்த, வலிந்த உணர்வுகளைப் பொறுத்தன. ஆனால் நீடித்து நிற்கும் ஆற்றல் சான்ற இலக்கியங்களுக்குக் கட்டுக்கோப்பான மொழிநடை வேண்டும் என்பதே காலம் நமக்குக் கட்டுகின்ற உண்மை. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போனற மென்மையான அறவிலக்கியங்கள் கூட மக்களுக்கு இன்னும் தேவைப்படுகின்றனவே - ஏன்? அவற்றின் மொழிநடை அவர்கள் கருதும் அளவில் மிக எளிமையாகத்தானே இருக்கின்றது. இதில் என்ன உண்மை யென்றால், அவற்றில் தேக்கி வைக்கப்பெற்ற கருத்துகளுக்கு ஏற்ப மொழிநடையும் மென்மையாக விருப்பதாலேயே அவை காலத்தை எதிர்த்து நிற்கின்றன.
16 : 2: இலக்கியத்தில் கூறப்பெறும் கருத்துகளுக்கு ஏற்ப மொழிநடையும் அமையப் பெற வேண்டும் என்பதே இங்குச் சுட்டப் பெறுகின்ற உண்மை என்று தெளிந்து கொள்ளுதல் வேண்டும். இரும்பைப் பஞ்சுத் துணியில் மூட்டை கட்ட முடியாது. பஞ்சை வைக்க இரும்புப் பெட்டியும் வேண்டுவ தில்லை. நமக்கோ பஞ்சும் வேண்டும்; இரும்பும் வேண்டும். பஞ்சை சணல் பையிலும், இரும்பை மரப்பெட்டி அல்லது இரும்புப் பெட்டி இவற்றிலும் வைத்துக் காக்க வேண்டும். வெள்ளி நகைகளில் எவரும் வைரத்தைப் பதிப்பதில்லை. நன்செய் நிலத்தில் எவரும் விழலை வைத்து வளர்ப்பதில்லை. வித்துக்கேற்ற நிலம், பொருளுக்கேற்ற பேழை போலவே கருத்துக்கேற்ற மொழிநடை கட்டாயம் வேண்டும் என்பதை நாம் மறந்துவிடுதல் கூடாது.
16 : 3: நடை எளியதாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப் பெறுவது எப்படிப் பிழையோ, அப்படியே நடை திட்பமானதாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒற்றுக் குத்தலாகச் சொல்வதும் பிழையே! கருத்துக்கேற்ற நடை