பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. சங்க இலக்கியம்

தமிழ்மொழி, நிலநூல், வானநூல் போலும் நூல்களைப் பெரு அளவில் பெறவில்லை என்பது உண்மையே. ஆனால், பண்பாடுணர்த்தும் இலக்கிய நூல்களைப் பெறுவதில், அது, எம்மொழிக்கும் பின்தங்கிவிடவில்லை. இலக்கிய நூல்களை எண்ணற்றனவாக்கொண்ட மொழிகள் உலகில் எத்தனையோ உள; அவற்றின் இலக்கிய நூல்களும் சிறந்தனவே எனினும், தமிழ் இலக்கிய நூல்களைப் போல் பெருஞ் சிறப்புடையவாகா, தமிழ் இலக்கிய நூல்கள். உயர்ந்த பண்பாடுணர்த்தும் இயல்புடைமையால் மட்டும் சிறந்தன என்பதில்லை. அது எண்ணிக்கையாலும் சிறந்ததாம்; தமிழ் இலக்கியம், கரைகாணாப் பெருங்கடலுக்கு ஒப்பாம்.

தமிழ் நாட்டு அரசர்களும், அறிஞர்களும், தமிழ் இலக்கியச் செல்வத்தைச் சங்கம் அமைத்து வளர்த்தனர். கடலால் கொள்ளப்பட்ட மதுரையிலும், கபாடபுரத்திலும், மதுரையிலும் முறையே, முதல், இடை, கடைச் சங்கங்களை அமைத்துத் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, அழகுடையவாக்கி வளர்த்தார்கள். அகத்தியனார், இறையனார், முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் முதலாம் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர் முதற் சங்கத்திலும், அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க்