பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12
கதிர்காமம்

மாணிக்கவாசகர், "கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே!" என்று பாடினார். இலங்கைக்குப் போகிறவர்கள் அப்படிச் சொல்வதற்கு ஓர் இடம் இருக்கிறது. இலங்கையின் இயற்கை அழகைக் கண்டு களிக்கப் போகிறவர்கள் அங்குள்ள நானில வகைகளையும் கண்டு இன்புறலாம். மலையும் மலைச் சாரலும் அருவிகளும் காடுகளும் கடற்கரையும் பிற காட்சிகளும் அவர்களுடைய கண்ணுக்கும் கருத்துக்கும் இன்பத்தைத் தரும். இலங்கை வாழும் மக்களையும் தொழிலாளர்களையும் அவர்களுடைய உழைப்பினால் உயர்ந்து நிற்கும் ரப்பர்த் தோட்டங்களையும் பரந்து, கிடக்கும் தேயிலைத் தோட்டங்களையும் தொழிற்சாலைகளையும் கண்டு களிக்கலாம். அழகான ரோடுகள், அற்புதமான விகாரைகள் ஆகியவற்றைக் காணலாம் பழைய சிற்பங்களையும் ஓவியங்களையும் கண்டு கண்டு அவற்றின் அழகைக் கண்ணால் மொண்டு மொண்டு உண்ணலாம்.

சிவபக்தர்கள் கண்டு களிக்கவேண்டிய சிவாலயங்கள் இலங்கையில் உண்டு. திருக்கேதீசுவரம், திருக்கோணமலை, நகுலேசுவரம் முதலிய தலங்களுக்குச் செல்லலாம். கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபடும் வழக்கத்தைக் கண்டு பெருமிதம் அடையலாம்.