பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

இலங்கைக் காட்சிகள்

கயவாகு வேந்தன் காலமுதல் கண்ணகி வழிபாடு இலங்கையில் பரவியது. இலங்கையின் மேற்குப் பகுதிக்கு மட்டக்களப்பு என்று பெயர் வழங்குகிறது. அங்கே பல இடங்களில் கண்ணகிக்குக் கோயில் உண்டு.[1]

அந்தப் பக்கங்களில் 'நாடு மழை வளம் குன்றி, பசியும் பிணியும் மிகுந்த மக்கள் அல்லற்படும் காலத்து, அவை நீங்கி மழையும் வளமும் சுரக்குமாறு கண்ணகியம்மனைச் சாந்தி செய்யும்' ஒரு விழா நடைபெறுவதுண்டாம். ஒவ்வோர் ஆண்டும் கண்ணகிக்குத் திருவிழா நடைபெறுகிறது. ஒரு கவைக் கொம்பின் இரண்டு கவைகளிலும் இரண்டு கயிறு கட்டி ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு கட்சியார் இழுத்து அந்தக் கொம்பை முறிப்பார்கள். இதற்குக் கொம்பு விளையாட்டு என்று பெயர். கயிற்றை இருபுறமும் இழுத்து விளையாடும் கயிற்றுப் போர் (Tug of war) போல இது நடக்கும் என்று தெரிகிறது. இந்த விளையாட்டுக்கு உபயோகமாகும் கொம்பைத்தான் கொழும்பு மியூசியத்தில் நான் பார்த்தேன்.

விழாக் காலத்தில் தென்சேரி என்றும் வடசேரி என்றும் கட்சி பிரிந்து கொம்பை முறிப்பார்களாம். தென்சேரி என்பது கண்ணகி கட்சி; வடசேரி என்பது கோவலன் கட்சி. அவர்கள் ஒருவரை ஒருவர் ஏசிப் பாட்டுப் பாடுவார்கள்.


  1. இலங்கைத் தமிழ் விழா மலர் என்ற வெளியீட்டில், 'மட்டக் களப்புத் தமிழகம்' என்னும் கட்டுரையில் பண்டிதர் வி. சீ. கந்தையா என்னும் அன்பர் இது சம்பந்தமான செய்திகளை எழுதியிருக்கிறார்.