கல்கி
17
சுங்க அதிகாரி உங்கள் பெட்டிகளையும் படுக்கைகளையும் திறந்து காட்டச் சொல்வார். வாயைத் திறந்து காட்டச் சொல்வார். வயிற்றைத் திறந்து காட்டச் சொல்வார். சட்டைப் பைகளை உதறிக் காட்டச் சொல்வார்.
எல்லாவற்றையும் பார்த்த பிறகு “ஏதாவது பட்டு கிட்டு எடுத்துப் போகிறீர்களா?” என்று கேட்பார்.
“இல்லை.”
“துணிமணி?”
“இல்லை. இலங்கையில் நிர்வாணம் அடைய எண்ணிப் போகிறோம்.”
“தங்கம் ஏதாவது இருக்கிறதா?”
“இல்லை, இருந்தாலும் கொடுக்கும் உத்தேசமில்லை.”
“வைரம்? வைடூர்யம்? கோமேதகம்? புஷ்பராகம்? ரத்தினம்? முத்து? பவழம்? (இல்லை! புகையிலை? கஸ்தூரி? கோரோசனை? குங்குமப் பூ!”
“ஒன்றும் இல்லை!”
சுங்க அதிகாரி மிக்க அதிருப்தி அடைந்து சந்தேகக் கண்ணுடன் உங்களை மேலுங் கீழும் பார்ப்பார்.
“ஓக்கே! போகலாம்!” என்று சொல்லி அடுத்த ஆளைக் கூப்பிடுவார்.
அப்புறம் போலீஸ் அதிகாரியிடம் போக வேண்டும்.
“எங்கே போகிறீர்?”
“இலங்கைக்கு!”
“இலங்கைக்கா? சிலோனுக்கா?”
“சிலோனுக்கு!”