பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

65


முன் அத்தியாயத்தின் இறுதியில் ஸ்ரீ ஹாண்டி பேரின்பநாயகம் அவர்களின் கைத் தடியைப் பற்றிச் சொல்லியிருந்தேன். இங்கு அந்த மனிதரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லத்தான் வேண்டும். அவரை ‘மனிதர்’ என்றா சொன்னேன்? அது அவ்வளவு பொருத்தமில்லை தான்! ஸ்ரீ ‘ஹாண்டி’ யை ஒரு மனிதர் என்று சொல்லுவதைக் காட்டிலும் அவரை ‘ஒரு ஸ்தாபனம்’ என்று சொல்லுவது பொருத்தமாயிருக்கும்.

அவருடைய நீளமான பெயரில் ‘ஹாண்டி’ (Handy) என்பது பழைய போர்ச்சுகீய ஆட்சியின் ஞாபகச் சின்னமாகும். போர்ச்சுகீய ஆட்சியில் கிறிஸ்துவர்களாக மாறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ பேரின்ப நாயகம். ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவர் - ஹிந்துக்கள் என்ற வேற்றுமை அதிகம் கிடையாது. ஒரே குடும்பத்தில் அண்ணன் கிறிஸ்துவராயும் தம்பி ஹிந்துவாயும் இருப்பார்கள். ஆனால் எல்லாரும் தமிழர்கள்; தமிழ்ப் பண்பாடு உடையவர்கள்.

ஸ்ரீ ஹாண்டி பேரின்பநாயகமோ கிறிஸ்துவரும் அல்ல; ஹிந்துவும் அல்ல. அவருடைய மதம் காந்தீய மதம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஸ்ரீ பேரின்பநாயகம் அகில இலங்கை யுவர் காங்கிரஸின் காரியதரிசியாயிருந்தார். அப்போது அவர் யுவராகவும் இருந்தார். இன்றைக்குத் தலை நரைத்த முதியவராயிருக்கிறார். இந்த மாறுதலுக்குக் காரணமான இரண்டு நிகழ்ச்சிகள் ஒரே நாளில் ஒரே சமயத்தில் அவருடைய வாழ்க்கையில் நேரிட்டன என்று அறிந்தேன்.