சிவஞான சுவாமிகள்
வரலாறு
வ்வரலாற்று நூல் (S. RM. C. T). சம்புலிங்க செட்டியார் அவர்கள் நன்கொடை பொருளுதவியால் 1 - 8 - 1932 இல் கா. சு. - கா.சு. அவர்களாலேயே வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு கழக வெளியீடு 813 ஆக, 1955 நவம்பரில் வெளிவந்தது.
தோற்றுவாய், சிவஞானமுனிவர் வரலாறு, வரலாற்று ஆராய்ச்சி, முனிவரது நூல்களின் சுருக்க ஆராய்ச்சி, கருவி நூல்களின் ஆராய்ச்சி என்னும் உள்ளுறையில் நூல் அமைந்தது.
வேதாந்த சூத்திரத்திற்குரிய பாடியங்களும், சிவ சூத்திரமும் சைவ சித்தாந்த நூலாகாமையையும், சைவ சித்தாந்த பாடியம் தமிழ்ச் சிவஞான பாடியம் ஒன்றே என்பதையும் தோற்றுவாயில் விளக்குகின்றார் (1-3). சிவஞான முனிவரின் படைப்புகளுள் மாபாடியமே தலை சிறந்ததெனக் ‘கா. சு.' உட்கொண்டமை யால்தான், முனிவரர் வரலாற்றுக்கு முன்னரே இவ்வாய்வைத் தோற்றுவாயாக வைத்தார் எனக் கொள்ளலாம்.
சிவஞான முனிவர் வரலாறு, திருவாவடுதுறைத் திரு மடத்துப் பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் குமாரசாமித் தம்பிரான் வேண்டுகோட்படி பாடப் படினும் அது நூற்றிருபது பாடல்களுடன் துறைசைத் திருமடத்துத் தலைவர் வரிசை கூறுமளவான் நின்றதைப் பேறின்மையாகச் சுட்டி, அதனைத் தழுவியே முனிவர் வரலாறு எழுதப் படுதலைக் குறிக்கிறார். வரலாற்று ஆராய்ச்சியும், பதினாறு பக்க அளவில் (4-19) அமைகின்றன. பொதியிற் சாரலில் அமைந்த விக்கிரம சிங்கபுரத்து ஆனந்தக் கூத்தர் மயிலம்மை ஆகிய பெற்றோர்களின் பேற்றால், முக்காளி லிங்கர் என்னும் பெயருடன் முனிவர் தோன்றியதை முதற் கண் உரைக்கிறார்.
"தென்மொழிக்கும் வடமொழிக்கும் திலகமெனச் சிறந்த அண்ணல் ஒருவர் புலவரது வீரசிங்கமென உதிப்பார்