தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்
155
ஒரே காலத்தில் கீழ்த்திசையிலும், மேற்றிசையிலும் ஒத்த மதிப்போடு விளங்குதல் அருமை. தற்காலத்தில் ஆகாகான் என்ற பெயர் பெற்ற மகம்மதுஷா இவ்வுண்மைக்குப் புற நடை யாக (இருதிசையிலும் சிறப்போடு) விளங்குகின்றார் என முதல் வரலாற்றைத் தொடங்குகின்றார் கா. சு. பல்வேறு நாடுகளிலும் உள்ள கோடிக் கணக்கான மகமதியர்கள் தம் சமயத் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் அவரை மதிப்பதை விளக்கி ஆகாகான் என்பது திருப்பெயராதலைக் கூறுகிறார்.
பாரசீகத்தில் மெகலெட் என்னும் மாநிலப் பெருந் தலைவருக்கு ‘ஆகாகான்' என்பது பட்டப் பெயர். மகம்மது ஆசன் என்பவர் பாரசீகத்தில் ‘வாரிசு உரிமை’ப் போட்டியில் தோற்று ஓடி வந்து பம்பாயில் தங்கினார். அவர் பேரனே ஆகாகான். மகம்மது ஆசன் பம்பாய்க்கு வந்து பெருஞ் செல்வரானார். அவரைப் பின்பற்றியவர்கள் கோசாக்கள்
எனப்பட்டனர்.
மகம்மதியருள் சீயர் என்றும் சுனியர் என்றும் உள்ள பிரிவுகளுக்குள் ஒற்றுமையுண்டாகவும், கல்வி வணிகம் ஆகிய வற்றில் சிறந்தோங்கவும் பாடுபட்டார். இந்திய நாட்டு விடுதலை கைவருங்கால், மகம்மதியர் தம் பிளவுகளைக் கருதாமல் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனப் பெரிதும் உழைத்து வந்தார். உலகப் பெருந் தலைவர்களுள் அவர் ஒருவராக விளங்குவதுடன், கீழை நாட்டு மக்களால் கடவுட்கு அடுத்த நிலையில் வைத்து வணங்கப்பட்டுக் காணிக்கை செலுத்தவும் பெறுகின்றார். இதுவரை அவர் செய்த வேலை வழி வகுத்தற்கே பயன்பட்டது. எதிர் காலத்தில் மிகப் பெரிய பதவி அவருக்கு அமைவதாகும் எனக் கணியங் கூறுவது போல் கூறுகிறார்
கா. சு.
ஐரிசு நாட்டு விடுதலைக்கு அரும்பாடுபட்டு வெற்றி கொண்டவர் திவாலரா. ஆனால், “திவாலரா வரலாறு போல் நேர்மையாகக் கூறப்படாத தற்கால வாழ்க்கை வரலாறு வேறு எதுவுமில்லை" என்று வருந்துகிறார் கா. சு. அவர் அழுத்தமான சனநாயகவாதியாக' இருந்தும் மதப் பித்தராகச் செய்தித் தாள் உலகம் காட்டி விட்டது என்கிறார். பொதுமக்கள் உங்கள் செயலை ஒப்புக் கொள்வார்களா என்னும் போது, என் உள்ளம் எனக்கு அது தக்க தென்று சொல்லுகிறது' என்று சொல்கிறார். இவ்வாறு சொல்கின்ற பொது நலத்