வ
தமிழ் வளம் - சொல்
49
சிறுவன், சிறியன் என்பவை இருவேறு பொருளன. பொருளறிந்தே சிறுவன், சிறியன் என்பவற்றைப் பயன்படுத்த வேண்டும். அகவை இளமை கருதியது சிறுவன். செய்கைச் சிறுமை கருதியது சிறியன். அவனுக்கு அகவைக் கட்டு இல்லை. அதனால்தான் “செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார்” என்றார் திருவள்ளுவர்.
சீலை, சேலை
சீலை, சேலை என்பவை இரண்டுமே சொல்லவும் எழுதவும் பெரு வழக்காக உள்ளன. இரண்டும் சரியாக முடியாது.ஒன்று சரியாக இருத்தலே முறை. இரண்டும் சரியான வடிவு என்றால் இரண்டு வேறு பொருள் தருவனவாக இருத்தல் வேண்டும். பொது மக்கள் வழக்கும் சொல்லியல் முறையும் நமக்குத் தெளிவூட்டுகின்றன.
சீலை துணி, சீலைக்காரி, சீலையைக் கிழித்துக் கொண்டா திரிகிறேன்,சீலைப்பேன் திரிகிறேன், சீலைப்பேன் என்பன பொது மக்கள் வழக்கில் இன்றும் உள்ளவை. அவர்கள் சீலை என்பதைச் ‘சேலை' எனக் கூறார். கூறினால், படித்தவர்கள் கூறக் கேட்டு அவர்கள் "படித்தவர்கள் பேச்சுச் சரியாக இருக்கும்" என்னும் தப்புக் கணக்கால் செய்யும் பிழையாக இருக்கும். படித்தவர்களே சேலை எனப் பெருவழக்குப்படுத்தி வருகின்றனர். எழுதியும் வருகின்றனர். சீலை நெய்வாரும் விற்பாரும் கூட இதற்கு விலக்கல்லர்.
“சீரை” என்பது பழஞ்சொல். ‘ஆடை பாதி ஆள் பாதி’ என்னும் பழமொழிக்கு மூலமாவது சீரை என்னும் சொல். ஒருவனுக்குச் சிறப்பாக அமைந்தது சீரை எனப்பட்டது. “சீரை சுற்றித் திருமகள் பின் செல” என்பது கம்பர் வாக்கு. சீரை என்னும் சொல் திரிந்து சீலையாக நிற்கிறது. 'நீர்' என்பது அதன் நிறத்தால் ‘நீல்' ஆவது சொல்லியல். அதன் நீளல் தன்மையால் ‘நீள்’ ஆதலும் விளக்கம். “சீர்த்தி மிகு புகழ்” என்பது தொல்காப்பியம். சீர்த்தி என்னும் பெண்பாற் பெயர் பண்டை வழக்கில் இருந்ததே. சீர்த்தி, கீர்த்தி யாயமை பிற்கால வழக்கு. அதற்கு வடசொல் முத்திரை குத்தப்பட்டது அக்காலத்தே தான்.
சேல் என்பது மீன், கெண்டை மீன், அம்மீன் போல் பிறழ்வும் பொலிவும். உடைமையில் சேலை எனப்பட்டது என்பது ‘பொருந்தப் பொய்த்தல்' என்னும் நெறிப்பட்டதாகும்.