140
66
―
இளங்குமரனார் தமிழ் வளம் 16
‘அந்தோ! பழந்தமிழ்க் கொற்கையே, பாராண்ட கொற்கையே! முத்துப்படு பரப்பின் கொற்கையே, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையாய் மூத்த கொற்கையே! உலக நாகரிகத்தின் உயர் பெருந்தொட்டிலே! கடல் மகள் கவின் முகமே! வாணிகத்தின் வைப்பகமே! காலத்தின் கோலத்தால் உன் நிலைமை இருந்தவாறு என்னே! என்னே! இந்நாட்டவர் நிலைமை தான் இருந்தவாறு என்னே! என்னே!” என ஏங்குகிறோம்.
ஏக்கம் மாறாத நிலையில் நாம் நிற்க நம் கையை அன்பர் நாராயணர் பற்றுகிறார். தென்பக்கம் அழைத்துச் செல்கிறார். குளத்தின் தெற்குக் கோடிக்கே கொண்டு செல்கிறாரே! அங்கே கோயில் ஒன்று இருந்த சான்றைக் காண்கிறோம்; ஈசுவரர் பீடம் கிடக்கிறது; கோயிலும் அதன் சுற்றும் இல்லை! ஆனால் அவற்றின் அடித்தளம் புதையுண்ட சான்றாகப் புலப்படுகின்றது. “இதன் பெயர்” என்னுமுன், 'தென்னகேசர் கோயில்' என்கிறார் நாராயணர். நம் உள்ளத்தில் ஒண்டமிழ் ஒளியூட்டுகின்றது. 'தென் அக்கஈசுவரர் கோயில்' என்பது புரிகிறதா, என்கிறது. 'தென்னகேசுவரர் கோயில்’.
மேற்கே அக்கசாலை ஈசுவரர் கோயில்; வடக்கே அக்க சாலை என்னும் ஊர்; தெற்கே, தென்னகேசுவரர் கோயில்; ஊடே அக்கசாலைத் தெருக்களின் அடித்தளம்; கிழக்கே செழிய நங்கை என்னும் வெற்றிவேலம்மை கோயில்! இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்ததும் ‘இன்னும் ஐயம் என்ன' எனத் தெளிவு பெறுகிறோம். பழங்காலப் பாண்டியர்கள் நாணயம் அடித்த அக்கசாலை இதுவே என்றும், அக்கொல்லுந் தொழிலால் சிறப்புற்ற கொற்கை இதுவே என்றும் முடிவுசெய்கின்றோம். நம் முன்னோர் ஊர்களுக்குப் பெயர் வைத்த பெருமையும், அப் பெயர்க் கரணியமும் அறிய முடியாமல் தடம் மறைந்து போன காலக்கேட்டையும் எண்ணுகிறோம். இப்பொழுதில் “அக்கசாலை ஈசுவரர் கோயிலில் பொற்கொல்லரே வழி வழியாக அறங் காவலராக இருந்து வருகின்றனர்” என்னும் செய்தியையும் கேள்விப்பட்டு, அறங்காவலர் சண்முக சுந்தரத்தைப் பார்க்கிறோம். “ஆம் உண்மைதான்! நான் பொற்கொல்லர் குடிவழியைச் சேர்ந்தவனே; ஏரலில் காசுக்கடை வைத்துள்ளேன்' என்கிறார். அதே மூச்சில், "இவ்வக்கசாலையில் இருந்து திருநெல்வேலிக்குக் குடிபெயர்ந்து போயுள்ள பொற்கொல்லர்கள், தம் பண்டையரை மறவாராய் அக்கசாலைத் தெரு ஒரு தெருவைத் திருநெல்வேலியில் அமைத்துக் கொண்டு
என