தமிழ் வளம் – பொருள்
159
கடல் அலை ஒருபக்கம்; கப்பல் அலை ஒரு பக்கம்; நாரை அலை ஒருபக்கம்; மிதவை அலை ஒரு பக்கம்; மீன் அலை ஒரு பக்கம் இவ்வாறு விதவிதமான ஆரவாரம்; அடும்பு மலர் அழகாகக் காட்சி வழங்கும் அவனது துறையில் அரிய மணத்திற்கும் பஞ்சமில்லை. மீன் நிறைந்து திரியும் அவனது மிகு பெருந்துறையிலே நாரை இனத்திற்குக் கொண்டாட்டந் தான். அந்தக் கொண்டாட்டத்தில் அடும்பு மலரை மிதித்துச் சிதைத்துச் சீரழிப்பது இயல்பான நிகழ்ச்சி! துள்ளித் துள்ளிச் செல்லும் மீன்களைக் கவரத் தள்ளித் தள்ளிச் செல்லும் நாரை. அதனால் என்ன? அடும்பு மலருக்குத்தான் அழிவு! இந்நிகழ்ச்சியைக் காணத் தண்ணந்துறைவன் தவறுவது இல்லை. இல்லை. துறைக் காட்சியே அவன் உள்ளம் - அவன் உள்ளமே - துறைக்காட்சி என்ற நிலையில் அமைந்து விட்டான். இது அவன் நாட்டினர் அனைவரும் அறிந்து தெளிந்த செய்தி.
அவளோ, அழகி! அழகுக்கோர் இலக்கியம். அது மட்டுமா அவளிடத்து விளங்கியது? அமைந்து கிடக்கும் அரிய பண்புகளை அளவிடுவதே அரிதுதான்.
கொடுத்துக் கொடுத்துத் தடிப்பு ஏறிய ‘தருகையர்’ வழிவழி வந்தவள் அவள். கொடையாளர் குலமணியாய் வந்த அவளும் கொடைக் கையளே என்பதற்கு ஐயம் எதுவும் இல்லை. பொருள் சிறிதும் இல்லாமல் இருந்தால் கூட, போய் ஒருவன் கேட்பின் இல்லை என்னாத உள்ளம் இயற்கையாகவே இளமை முதல் அவளிடத்து அரும்பி விட்டது. அதுமட்டுமா? பிறர் கொடையை நாடி நிற்கும் இயல்பு சிறிதும் அவளிடம் இல்லை. தான் கொடுத்த பொருளை மீண்டொருவர் தரினும் அதனை வாங்காத வலிய வண்மையுள்ளம் வளர்ந்து ஓங்கிய பெரியவள் அவள். சுருங்க உரைத்தால், கொடுத்த பொருள் ஒன்றை மீண்டும் வாங்கித் தான் வாழ வேண்டும் என்னும் வாழ்வுச் சிக்கலோ, தாழ்வுச் சிக்கலோ நேருமாயின் அதற்காகப் பெரிதும் போற்றிப் பெட்புறக் காக்கும் உயிரையும் விடுவளே அன்றி அதனை வாங்கிக் கொள்ளாக் குணக்குன்று அவள்.
இத்தகைய தலைவனும் தலைவியும் ஒருவர் உள்ளத்து ஒருவர் உறையும் பேறு பெற்றனர். அதுவும் எளிதில் அன்று! மங்கை நல்லாளின் அழகுத் திருமேனியைத் தண்ணந் துறைவன் ஒருநாள் காண நேர்ந்தது. நேர்ந்தது. என்றும் பெறாப் பேரின்பம் பெற்றான்! "எப்படியும் அடைந்தே தீருவேன் அவளை” என்று துடித்தான். நேரிடையாகச் சென்று, பேசி அறியாத அவளிடம்