தமிழர் வாழ்வியல் இலக்கணம்
91
இன்னார் என அறியப்படுவன் ஆயின், அவனைப் பற்றிய அப் பாடலை, அகப்பாடல் வகையில் இருந்து நீக்கிப் புறப்பாடல் வகையில் சேர்ப்பதைத் தொகுப்பாளர் கொண்டனர் என்பதை அறியும் போது, அந் நெறி வழிவழியாகப் போற்றப்பட்டமை விளங்கும்.
இனி, அகப் பொருளில் இடம் பெறுவார்க்கு என்ன பெயர்தான் வைப்பது எனின், தலைவன் தலைவி, கிழவன் கிழத்தி, ஒருவன் ஒருத்தி, தோழன் தோழி, செவிலி நற்றாய் இன்னவான உரிமைப் பெயர்களே வரும். அன்றியும் ஆயர், வேட்டுவர், கோவலர், எயினர், உழவர், கிழார், நுளையர், பரதவர் என்னும் வினைநிலைப் பெயர்களும் வரும்
"பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே”
எனச் சுட்டுகிறார் (966).
அகனைந்திணைக்கும் உரிமைப் பட்டவரே கிழவன், கிழத்தி என்றும், தலைவன் தலைவி என்றும் வழங்கப்பட்டனர். இக் கிழமை பின்னே நிலவுரிமைக்கும் குடிமைத் தலைமைக்கும் பெயராயிற்று. கோவூர் கிழார், முதிரத்துக் கிழவன், நிலக் கிழார், பெருநிலக் கிழார் என்னும் பெயர்கள் ஏட்டிலும் நாட்டிலும் காண்பவையும் கேட்பவையும்.
"செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
என்பது மனைக் கிழமை, நிலக் கிழமை என்பவற்றின் இணைப்பாகும். ஆகார் சிலர்
அகனைந்திணைக்குத் தக்கவர் அல்லர் எனச் சிலர் அந் நாளில் ஒதுக்கப்பட்டும் இருந்தனர். தம் முரிமைப்பட்டு வாழ முடியாதவராய்ப் பிறர்க்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர் அவருள் ஒருவர். அடிமைப்பட்டுக் கிடப்பானுக்கு உரிமை இன்பவாழ்வு கொள்ள வாயாது; வாய்ப்பி னும் தன்னோடு தன்னையடுத்தவரையும் அடிமையில் கிடக்கவே வைப்பன். ஆதலால் அவரைப் பாடுதற் பொருளாகப் புலமையர் கொண்டிலர்.
ஒருத்தி ஒருவனை விரும்புகிறாள், அவனிடம் தன் விருப்பையும் கூறுகிறாள். அவனோ, நீங்கள் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கலாம். ஆனால் நானோ எனக்குச் சம்பளம் தருபவர் சொற்படியே என் வாழ்வை அமைக்க முடியும் என்கிறான். அவன் வாழுரிமையனா?
ஏவுவார் ஏவுவதை அன்றித் தாமே எண்ணிச் செய்யாதவரும் உண்டு. அவர் செயல்புரிதலில் வல்லவராக இருப்பினும், எண்ணிச் செய்யும் திறம் இல்லாதராதலின் அவரும் உரிமை இன்ப வாழ்வுக்கு உரியவர் ஆகார்