188
இளங்குமரனார் தமிழ்வளம் - 19
“வாழ்த்தியல் வகைநாற் பாவிற்கும் உரித்தே ”
(1366)
என்று எங்கெங்கும் வாழ்த்துக்கு வழி கூறியுள்ளது. புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியறிவுறூஉ என்பவற்றை அறம் முதலாகிய மும்முதற் பொருளையும் காக்கும் வகையால் கூறுகின்றது (1363).
புறநிலை வாழ்த்து
நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னைக் காப்பதாக! பழியற்ற வகையில் செல்வம் சேர்வதாக!
வழிவழியாகக் குடிநலம் பெருகி வாழ்வாயாக!
- என்று வாழ்த்துவது புறநிலை வாழ்த்து (1367).
“எவ்விடத்தாயினும் தெய்வம் உறைதலின், திருக்கோயில் வளாகமே யன்றி எங்கும் வழிபாடு செய்யலாம்; வாழ்த்துக் கூறலாம்" என்பதை உணர்த்தும் வகையால் புறநிலை வாழ்த்து என்றார். நீ வழிபடு தெய்வம் 'நிற்புறம் காப்ப' என்பது இறை உடனாகி ஒன்றாகிக் காக்கும் என்பது.“புறம் புறம் திரிந்த செல்வமே” என்னும் மணிவாசகத்தால் இது புலப்படும். மற்றும், "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்” என்னும் குறள் (1023) முயற்சியாளனுக்குத் தெய்வம் ஓடிவந்து உதவும் என்பதும் எண்ணத் தக்கது. “தெய்வம் நின்புறம் நிற்பதாக” என்று வாழ்த்துதலால் புறநிலை வாழ்த்தாம்.
வாயுறை வாழ்த்து
வேம்புபோல் கசப்பும், நஞ்சுபோல் அழிப்பும் உடைய கொடிய சொற்கள் இடம் பெறல் இல்லாமல், வாழ்த்துதலும், நீ எடுக்கும் முயற்சி களும் செல்லும் செலவுகளும் மேலும் மேலும் நலமாக அமைவதாக என்று வாழ்த்துதலும் வாயுறை வாழ்த்தாம்.
வாயுறை வாயில் இருந்து பொழியும் அமிழ்து. வானில் இருந்து பொழியும் அமிழ்துபோல் வாயில் இருந்து பொழியும் அமிழ்து வாயுறை ஆயிற்று. உறை = மழை, அமிழ்து. இன்பத்து அமிழ்த்துவது ஆதலாலும் வாய்க்கண் இருந்து அவ்வின்பச் சுரப்பு வெளிப்படுதலாலும் வாயுறை ஆயிற்று.
“வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே”
என்னும் இந் நூற்பாவிற்கு (1369),