உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

நூலாசிரியரைச் சிறப்பித்தல்

239

நூலாசிரியர் தொல்காப்பியர் இலக்கண நூற்பா யாத்தனர் எனினும், அந் நூற்பா இலக்கிய நயமுடையது என்பதை உட்கொண்டவராய்ச் "செய்யுளின்பம் நோக்கி அளபெழுந்து நின்றது” என்றும் (210), “செய்யுளின்பம் நோக்கி வினையொடும் பெயரொடும் என்றார்” என்றும் (295), "தாம் என்பது கட்டுரைச் சுவைபட நின்றது” என்றும் (398) இன்னவாறு நயம் உரைக்கும் பகுதிகளால் சேனாவரையர் நூலாசிரியரைச் சிறப்பித்தலை நிலைப்படுத்துகிறார்.

66

‘அகத்திய முதலாயின எல்லா இலக்கணமும் கூறலிற் பல்வேறு செய்தியின் நூலென்றார்” என்று சொல்லதிகார இறுதி நூற்பா விளக்கத்தில் சேனாவரையர் வரையும் உரை, தொல்காப்பியர் புலமைப் பரப்பை நோக்கிக் கூறியதாம் (463).

விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமையுள் அடக்குதலும், தனியே பிரித்து எண்ணலும் என இருமுறைகளும் வடமொழியில் உண்டு என்றும், ஐந்திர நூலார் தனியே பிரித்து எண்ணுபவர் என்றும், தொல் காப்பியர் அம்மதத்தைக் கொண்டவர் ஆகலின் வேற்றுமை எட்டெனக் கொண்டார் என்றும் சேனாவரையர் விளக்கிக் கூறுகிறார். இக்கருத்தை விளக்குதற்கே “பாயிரத்துள் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று கூறப்பட்டது என்பதையும் சுட்டுகிறார் (74).

பொருள் விளங்கா நிலையில் ‘அகப்படச் சூத்திரம் செய்யார் (குன்றக் கூறலாக அமையார்) என்றும் 'பொருள் விளங்க விதந்து கூறுவார்’ (விளக்கித் தெளிவுறக் கூறுவார்) என்றும் இவர் கூறுவன நூலாசிரியர் நூற்ற திறத்தை நயமுறக் கூறுவதாய் அமைகின்றன (35, 36).

பலபொருள் ஒருசொல் அமையும் வகைகளைக் கூறி அவ்வகை களின் இலக்கணத்தைத் தனித்தனியே குறிக்கிறார் தொல்காப்பியர். அந்நூன் முறையை நயக்கும் சேனாவரையர், “இலக்கணச் சூத்திரங்களே அமையும்; இச்சூத்திரம் வேண்டா பிறவெனின், இருவகைய என்னும் வரையறை அவற்றால் பெறப்படாமையானும், வகுத்துப் பின்னும் இலக்கணம் கூறியவழிப் பொருள் இனிது விளங்குதலானும் இச் சூத்திரம் வேண்டும் என்பது” என்கிறார். இதனால், தொல்காப்பியர் நூலியற்றிய சிறப்பைச் சுட்டும் அளவுடன் நில்லாமல், இந்நெறியைப் போற்றுதல் சிறப்பு எனப் பின்வருவார்க்கு எடுத்துக்காட்டும் தேர்ச்சியாளராகவும் சேனாவரையர் அமைதல் புலப்படுகின்றது.

ஆசிரியர் தொடுக்கும் நயத்தைத் தக்காங்கு எடுத்துரைத்தலில் தனித்திறம் காட்டுகிறார் சேனாவரையர்.